பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கை வாயு

61

இரத்தம் சென்றிருக்கும் நாளங்களின் நீளம் 99, 200 கி. மீட்டர்களாக இருக்கும்.

இதயத்தின் துடிப்பை நாடித்துடிப்பு எனக் கூறுவர். இதனை நாடிகளைத் தொட்டு அறிவர். மருத்துவர் தன்னிடமுள்ள இதய ஒலி மானியாகிய 'ஸ்டெதஸ்கோப்’ எனும் கருவி மூலம் துல்லியமாகக் கண்டறிவர்.

நாம் மூச்சை உள்ளே இழுக்கும்போது பிராணவாயுவாகிய ஆக்சிஜனை அதிகமாகச் சுவாசிக்கிறோம். அவ்வாறே நாம் மூச்சை வெளிவிடும்போது கரியமில வாயுவாகிய கார்பன்டைஆக்சைடை வெளிவிடுகிறோம்.

இதயம் எக்காரணத்தாலாவது முற்றாகக் கெட்டுவிட்டதென்றால், அதனை அகற்றி அதற்குப் பதிலாக நன்றாக உள்ள வேறொருவருடைய இதயத்தை எடுத்துப் பொருத்தி இயங்கச் செய்ய முடியும். இது இதயமாற்று அறுவை சிகிச்சை முறையாகும்.

இயற்கணிதம் : இயற்கணிதம் (Algebra) என்பது கணிதத்தின் ஒரு முக்கிய பிரிவாகும். எண் கணிதம் (Arithmetic) தொடர்பான சிக்கல்களைச் சுருக்கமாக எழுதவும் தீர்க்கவும் இயற்கணிதம் பயன்படுத்தப்படுகிறது.

இயற்கணிதமானது அடிப்படை இயற்கணிதம், கருத்தியல் இயற்கணிதம் என இரு பெரும்பிரிவுகளாகக் கொள்ளப்படுகின்றன. அடிப்படை இயற்கணிதம் என்பது எண் கணிதத்தின் பொதுமைப்பாடாகும். இயற்கணிதத்தில் பொதிந்து கிடக்கும் தத்துவங்களை வெளிப்படுத்துவது கருத்தியல் இயற்கணிதமாகும். கருத்தியல் தன்மையே இயற் கணிதத்தின் பெரும் சிறப்பாகும்.

எண் கணிதத்தில் மெய்யெண்கள், கலப்பு எண்கள் ஆகியவற்றின் கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் ஆகியவற்றின் செயற் பண்புகள் விவரிக்கப்படுகின்றன. அடிப் படைக் கணிதத்தில் எண்கள் X Y Z என்ற எழுத்துக் குறிகளால் குறிக்கப்படுகின்றன. இவ்வெழுத்துக்கள் மாறிகள் எனவும் கூறப்படுவதுண்டு.

அடிப்படை இயற்கணிதத்தின் குறிக்கோள் எண்களுக்கிடையேயான அடிப்படைச் செயல்கள், தொடர்பு, சமன்பாடுகளின் தீர்வு காண்பது போன்றவைகளாகும். இதில் மாறிகளும் குறியீடுகளும் பயன்படுத்தப்படுவதால் மிகுந்த பயன் விளைகிறது.

இயற்கணிதத்தை அடிப்படையில் பொதுமைப்படுத்தவும் தருக்க முறையில் அமைக்கவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக உருவானதே கருத்தியல் இயற்கணிதம். இது 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் உருவானது. அடிப்படை இயற்கணித வழிமுறைகளிலிருந்து கருத்தியல் இயற் கணிதம் சற்று மாறுபட்டதாக அமைந்துள்ளது.

இயற்பியல் : அண்மைக்காலம்வரை 'பௌதிகம்' (Physics) என்று அழைக்கப்பட்ட அறிவியல் துறையே இன்று இயற்பியல் எனத் தமிழில் வழங்கப்படுகிறது. இது அறிவியலின் மிக முக்கியப் பிரிவாகும். இயற்பியலானது எளிய விதிமுறைகளைக் கொண்டு இயற்கையின் பல்வேறு நிகழ்வுகளை விளக்குகிறது. புதிய புதிய கண்டுபிடிப்புகளின் விளைவால் புதுப்புது பிரிவுகள் இயற்பியலிருந்து கிளைத்துள்ளன. இவை அனைத்துமே இயற்கையின் செயல்பாட்டை வெவ்வேறு கோணங்களில் தக்க விதிமுறைகளின் அடிப்படையில் விளக்குவனவாகும்.

இயற்பியலின் அடிப்படைத் தன்மைகளை இரு பெரும் பிரிவாகப் பகுத்துக் காணலாம். ஒன்று இயக்கவியல் (Mechanics) மற்றது புலக்கோட்பாடு (Field Theory) ஆகும். ஒரு விசைத்தூண்டலில் ஏற்படும் இயக்கம் பற்றி ஆய்வது இயக்கவியல். ஈர்ப்பு, அணுக்கரு விசை போன்றவற்றால் விசைப் புலத்தில் ஏற்படும் பல்வேறு விசைத் தன்மைகள், இயற்கைப் பண்புகளை ஆய்வது புலக்கோட்பாடாகும்.

அன்று முதல் இன்றுவரை ஏற்பட்டு வந்துள்ள தொடர் ஆய்வின் விளைவாக பழைய இயற்பியல் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய கோட்பாடுகளும் பிரிவுகளும் ஏற்பட்டுள்ளன. ஆயினும் இவையனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாகவே உள்ளன.

இயற்கை வாயு : நமக்குத் தேவையான எண்ணற்ற பொருட்களை இயற்கை பூமிக்குள் மறைத்து வைத்துள்ளது. மனிதன் தன் மதி நுட்பத்தால் அவற்றைத் தோண்டி எடுத்துப் பயன்படுத்துகிறான். அவ்வாறு மண்ணுள் புதைந்துள்ளவற்றுள் மிக முக்கியமானவைகள்