பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99

6. அனைத்துத் தரப்பினரும் மதீனா நகரை புனித மிகு நகராகக் கருதிச் செயல்பட வேண்டும்.

7. அனைவருக்கும் பொதுவான செயற்பாடுகளில் ஈடுபடும் போது எழும் ஐயப்பாடுகளையும் நடவடிக்கைகளில் எதிர்ப்படும் சங்கடங்களையும் நபிகள் நாயகம் (சல்) அவர்களிடம் எடுத்துக்கூறி, அதற்கு அவர் தரும் தீர்ப்பை அப்படியே ஏற்று ஒழுக வேண்டும்.

பல்வேறு சிறப்பம்சங்களைத் தன்னுட் கொண்ட அச் சட்டத்தின்படி அங்குள்ள ஒவ்வொரு சமய, சமுதாயத்தினரும் தங்கள் மனச்சாட்சிப்படி நடக்க முழுச் சுதந்திரம் உண்டு என உத்திரவாதம் அளித்தது. அவரவர் தத்தமது உசிதப்படி சமய சகிப்புணர்வைக் கைக்கொண்டு வாழ முழு உரிமை உண்டு. முஸ்லிம்கள் தங்கள் மார்க்க நெறிப்படி வாழ உரிமை இருப்பது போன்றே யூத சமயத்தவர்களும் கிருஸ்தவ மதத்தவரும் பிற சமயங்களைச் சார்ந்தவர்களும் தத்தமது சமய, ஆச்சார அனுஷ்டானத்தின்படி வாழ முழு உரிமை படைத்தவர்களாவர் என்பதை இச் சட்டம் எல்லா வகையிலும் உறுதிப்படுத்தியது. அதே போன்று தங்கள் தங்கள் சமயச் சூழலுக்குள் ஏற்படும் எத்தகைய விவகாரமாயினும், அதை அவரவர் சமயச் சூழலுக்குள்ளாகவே, தங்கள் சமய அடிப்படையில் தீர்த்துக் கொள்ள வேண்டும் யூத சமய விவகாரங்கள் யூத சமய நெறிமுறைகள் அச்சமயச் சட்டங்களின் அடிப்படையிலேயே தீர்வுகாண வேண்டும். கிருஸ்தவ சமயச் சச்சரவுக்கான தீர்வை கிருஸ்தவ மதச் சட்டங்களின் கீழும், அவ்வாறே பிற சமயத்தவர்களும் தத்தமது சமய நியதிப்படியும் சட்ட அடிப்படையிலும் சமயத் தலைவர்கள் வழங்கும் தீர்ப்பை ஏற்றுச் செயல்பட வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (சல்) அவர்கள் எழுத்து வடிவில் உருவாக்கிய மதீனா நகர்ச் சட்டம் உரிமையும் உத்திரவாதமும் அளித்தது.