பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

இன்று ஐரோப்பிய நாடுகளில் உருவாகி செயல்பட்டு வரும் சமூகப் பாதுகாப்புத் திட்டம் அன்றைய மதீனா அரசமைப்புச் சட்டத்தின் எதிரொலியாக உருவாக்கப்பட்ட திட்டமே எனக் கூறினும் பொருந்தும். வேலையில்லாத அல்லது வேலை செய்து சம்பாதிக்க இயலாத யாரேனும் ஒருவர் பொருளாதாரக் கஷ்டங்களுக்கு, முட்டுப்பாட்டுக்கு ஆளானால் அவருக்கு அரசே உதவித் தொகையாக நிதியுதவி வழங்கிக் காப்பாற்றுகிறது. இதன் மூலம் சமூக அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்கட்கு உதவி துயர் துடைக்கப்படுகிறது.

எண்ணிக்கை பேதமில்லை

மதீனா நகர அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற எண்ணிக்கை பேதம் கடந்த ஒன்றாக, ஆழ்ந்த சமய சகிப்புணர்வுடன், சமூக விழிப்புணர்வோடு மக்களுக்கு எல்லா வகையிலும் உதவியும் ஒத்துழைப்பும் நல்கி நல்லதோர் நகரச் சமுதாயமாக மலர்ந்திருந்தது.

ஒவ்வொரு சமயத்தவரும் மாறுபாடு அல்லது வேறுபாட்டுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் சமயச் சகிப்புணர்வுடன், தங்கள் தங்கள் சமய அடிப்படையில் முழுச் சுதந்திரத்துடன் வாழ்ந்தனர். தங்கள் மத நம்பிக்கையின்படி வாழவும் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வழியேற்பட்டது.

இவ்வாறு, உலகம் என்றென்றும் பின்பற்றி ஒழுகத் தக்க ஓர் உன்னத அரசமைப்புச் சட்டத்தை, முன் மாதிரி சட்ட வரைவைத் தந்து வரலாறு படைத்த பெருமை பெருமானார் அவர்களையே சாரும்.