பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

ஒருமைப்பாடு குறித்தும் சமய நல்லிணக்கம் பற்றியும் முன் எப்போதையும் விட இப்போது அதிகமாகப் பேசப்படுகிறது; எழுதப்படுகிறது; முனைப்புடன் சிந்திக்கப்படுகிறது. இவற்றின் இன்றியமையாத் தேவை இன்று பெரிதும் உணரப்படுவதே இதற்குக் காரணம். சமய நல்லிணக்கமே ஒருமைப்பாட்டின் அடித்தளமாகும்.

சமய நல்லிணக்கத்திற்கு இறை மறையாகிய திருக்குர் - ஆனும் அதன் வழிப்பட்ட இஸ்லாமிய மார்க்கமும் அதனை உலகில் நிலைநிறுத்திய பெருமானாரின் வாழ்வும் வாக்கும் உலகிற்கு வழிகாட்டும் ஒளி விளக்குகளாக அமைந்துள்ளனவெனலாம்.

இஸ்லாத்தின் ஒளியில், சமய நல்லிணக்கத்தை அண்ணலாரின் வாழ்க்கை வழியே வரலாற்றுப் பூர்வமாக ஆய்வதுதான் இந்நூலின் நோக்கம்.

உலக மக்களுக்கு நேர்வழி காட்ட இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து இறைதூதர்களையும் அவர்கட்கு வழங்கப்பட்ட வேதங்களையும் முழுமையாக நம்பப் பணிக்கிறது இறுதி வேதமான திருக்குர்ஆன். இதையே பெருமானாருக்கு அறிவுறுத்தும் வகையில் அல்லாஹ், “எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் நாங்கள் நம்புகிறோம். எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே, நாங்கள் அவனுக்குத்தான் முற்றிலும் வழிப்பட்டு நடக்கிறோம் என்று கூறுவீர்களாக” (திருக்குர்ஆன் 129:46) எனப் பணிப்பதன் மூலம் இறை வேதங்களும் அவை புகட்டும் இறைவனும் ஒன்றே எனக் கூறி, இறை ஒருமைப்பாட்டை நிலைநாட்டுகிறது திருமறை.