பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு சாஸனம்


இந்தப் புத்தகத்தின் பின்னால் ஒரு சின்ன விவரம் இருக்கிறது. சின்னது; ஆனால் எனக்கு அதன் பாதிப்பு அதிகம்.

ஸாஹித்ய அகாதெமி விருது (1989) எனக்கு என்ற சேதி TVஇல் வந்த அன்றிரவு எனக்குத் தூக்கமில்லை. பரபரப்பு மட்டுமன்று, இன்னும் ஏதோ காத்திருக்கிறது எனும் உள்ளுணர்வு. இது போல எனக்கு நேர்வதுண்டு. அதுபோன்ற நேரங்கள் எனக்கு எப்பவும் பிடித்தமாயிருந்தன என்று சொல்வதற்கில்லை.

விழித்திருந்த அலுப்பிலேயே கண்ணயர்ந்திருக்கிறேன். எந்நேரம் அறியேன். தட்டியெழுப்பினாற்போல் வெடுக்கென விழிப்பு. மூளையுள் ரத்தம் வேகமாய்ப் பாய்வதுபோல், கிர்ர்ர் — எழுந்து உட்கார்ந்து இரு கைகளிலும் தலையைப் பிடித்துக்கொண்டேன். மண்டைக்குள் ஒரு எண்ணம் மின்னலடித்தது.

உன் எழுத்துக்கு நீ முடிவு காணப்போவதில்லை.

அதற்கு உனக்கு இனி நேரமில்லை.