பக்கம்:உத்தரகாண்டம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302   ✲   உத்தரகாண்டம்

தபதவென்று வெளியே கூட்டம் வாழ்க, வாழ்க என்ற மோதியடித்துக் கொண்டு ஓடுகிறது.

வெள்ளைக் குர்த்தாவும் கால் சட்டையுமணிந்த இளம் பிள்ளை ஒருவனும், அதே போல் உடையணிந்த ஒரு பெண்ணும் அங்கே வருகிறார்கள். “பாட்டியம்மா, இங்க உட்காரலாமா?” பையை மடியில் வைத்துக் கொண்டு அவள் இடம் கொடுக்கிறாள். அந்தப் பையன் அழகாகப் புன்னகை புரிந்து ‘தாங்க்யூ’ என்று நன்றி சொல்கிறான். ஆனால் நெருக்கியடித்து உட்காரவில்லை. “இந்த வண்டிதா விழும்புரம் போவுதா?” என்று கேட்டுக் கொண்ட குஞ்சும் குழந்தையும் சாப்பாட்டுப் போகணியுமாக ஒரு குடும்பம் முன்னேறுகிறது.

நேரமாக ஆக, இவளுக்குக் கவலை மேலிடுகிறது. கன்னியம்மாவைக் காணவில்லையே?

இன்னும் யார் யாரோ இளைஞர், வருகிறார்கள். படித்தவர், படியாதவர், கூட்டம் நெருக்குகிறது. மாடிப்படிகள் அதிரும் கூட்டம். பத்திரிகை, புத்தகம், காபி, டீ, தண்ணீர் வாணிபங்கள் நடக்கும் மேடை.

“ஏம் பாட்டி, உங்க பேத்தி வரலியா இன்னும்?... நீங்க போற வண்டி, அதா அந்த பிளாட்ஃபாரத்திலேந்து போயிடிச்சி...”

“அப்பிடியா? எனக்குத் தெரிலியே? இப்ப வாரேன்னுதா போனா...”

“பணம் குடுத்திருக்கீங்களா?”

“இல்ல தாயி...”

“இப்ப டிக்கெட் இருக்குதா?...”

“இல்லியே?...” அழுது விடுவாள் போலிருக்கிறது.

“ஒரே கூட்டம். எங்கேயானும் மாட்டிட்டிருக்கும். சரி, உங்களுக்கு நா சீட்டு வாங்கிட்டு வரேன். இத வண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/304&oldid=1050419" இலிருந்து மீள்விக்கப்பட்டது