பக்கம்:உத்தரகாண்டம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    49


சிவலிங்கத்தின் சம்சாரம், கொழுகொழுவென்ற கன்னங்களுடன் இருந்த பெண் வற்றித் தேய்ந்து, கண்கள் பாதாளத்தில் இறங்க... பேச்சில் மலையாள வாடை வீச...

“எந்தா அம்மே அப்படிப் பார்க்கிறது? நான் சுந்தரிதா. சிவலிங்கத்தின் சம்சாரமான்னு கேட்டீங்க...”

குழந்தையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு அதன் இரு குஞ்சுக்கரங்களையும் சேர்த்து, “பாட்டிக்கு வணக்கம் சொல்லு...” என்று ஒரு சிரிப்பை இழைய விடுகிறாள்.

“நீ முன்ன சீலை உடுத்திருந்தேம்மா. இப்ப இந்தக் கவுனு போட்டிருக்கிறியா. புரியல... ஆமா, நீ ராமுண்ணி சேட்டான்னு சொன்னே. யாரு, தூக்கு தண்டனையிலேந்து மீண்டு வந்து கலியாணங்கட்டிக் கிட்டிருந்தாரு. அவரு போயி ஏழெட்டு வருசமாச்சி போல. அவுரு மகனா?...”

“ஆமம்மா. அவரு போனப்ப பையன் எய்த் படிச்சிட்டிருந்தது. அதுக்கு மின்னயே அவருக்கு உடம்பு சரியில்லாம போயி, ரொம்பக் கடனாயிட்டது. துபை ஆசுபத்திரில நல்ல வேலை வந்திச்சி. ஆனா புள்ளைய அழச்சிட்டுப் போக முடியல. சாயபு அய்யாதாப் பாத்து, ஹோம்ல சேர்த்தாரு. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போயிப் பாப்பாங்களாம். மாசாமாசம் அம்மை பணம் அனுப்பிச்சிக் குடுக்கும் போல. பையனைப் புள்ளலூர் இன்ஜினிரிங் காலேஜில சேத்திருக்காங்க. படிக்கிதோ, படிச்சிரிச்சோ தெரியல...” அவள் பேசி முடிக்கும் வரையிலும் குழந்தையின் கை இவளைக் கும்பிட்டுக் கொண்டே இருக்கிறது.

தன்னிச்சையான செயல் போல், அவள், புடைவைக்குள் செருகியிருந்த சுருக்குப் பையைத் திறந்து கசங்கிய ஐந்து ரூபாய் நோட்டொன்றை எடுத்துக் குழந்தை கையைப் பிரித்து வைக்கிறாள்.

“அய்யோ, இதெல்லாம் எதுக்கம்மு?” என்று மொழிந்த சுந்தரி, “தாங்க்ஸ் சொல்லு, குட்டி, தாங்க்ஸ் சொல்லு?” என்று குழந்தை கையை நெற்றியில் மலர்த்தி வைக்கப் பணிக்கிறாள்.

உ.க.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/51&oldid=1049462" இலிருந்து மீள்விக்கப்பட்டது