பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள் 163

சொத்து. நம்மை நாமே வதை செய்துகொள்ள நமக்கு உரிமை கிடையாது. ஆண்டவன் நமக்கு விடுதலை கொடுக்கும் வரை காத்திருக்க வேண்டும்.’’ என்று பதில் சொன்னார்.

      அவருடைய நண்பர்கள் “தங்களை எப்படி அடக்கம் செய்யவேண்டும்” என்று கேட்டபோது, “இறந்த பிறகும் நான் அந்த உடலில் இருப்பதாகத் தவறாக எண்ணிவிட்டீர்களே, இறந்தபிறகு அந்த உடலில் நான் ஏது? உங்கள் சாக்ரடீஸ் ஆவியாகிச் சென்றுவிட்டபின் கிடப்பது உணர்வற்ற சடலம் தானே? அதை எப்படிச் செய்தால் என்ன? ஏன் என்னை, சாக்ரடீஸை புதைக்கிறோம் அல்லது எரிக்கிறோம் என்று நினைக்கிறீர்கள். என்னிடம் இவ்வளவு நாள் பழகியும் உண்மையை மறந்துவிட்டீர்களே” என்று சொன்னார். அவரது தத்துவ விளக்கங்கள் கேட்கக் கேட்க, இந்த அருமையான ஒளி உமிழும் கருத்துக்கள் மறையப் போகிறதே இன்னும் சில மணி நேரங்களில் என்ற நினைப்பு மேலெழும்போது அனைவரும் அழுது புலம்பினர்.
      சிறை அதிகாரி விஷக்கோப்பையுடன் வந்து “பெரியவரே இங்கே வந்த கைதிகளில் மிகவும் பெருந்தன்மையுடனும் அறிவுத் தெளிவுடனும் இருக்கும் தங்களுக்கு விஷம் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பே என்னை வருத்துகிறது.இருந்தாலும் சட்டங்களின் தீர்ப்பின்படி இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டியவன் நான்” என்று கண்ணீரோடு விஷக்கோப்பையை தந்தான். சிறிதுகூட முகம் சுளிக்காமல் கைகள் நடுங்காமல் சிரித்த முகத்தோடு, “நண்பரே இதை எப்படி சாப்பிட வேண்டும். என்ன செய்ய வேண்டுமென்று முறையாகச் சொல்லுங்கள். உங்களுக்கு எந்தச் சிரமும் இன்றி நான் அதைச் செய்கிறேன்” என்றார் சாக்ரடீஸ். “ஐயா, இதை சாப்பிட்டு விட்டு நடந்துகொண்டே இருக்கவேண்டும். கால்கள் மரத்துப் போனதும் படுக்கவேண்டும். காலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உணர்வற்றுப் போகும். இறுதியில் மரணம் சம்பவிக்கும்” என்றான்.