பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

உலக வரலாற்றில்



இராணுவத் தலைவர் புரட்சியை நடத்தினார் என்ற பெயரும், புகழும் நாகிப்புக்குப் போய்ச் சேர்ந்தது! ஆனால் உண்மையில் இந்த ராணுவப் புரட்சிக்கு மூளையாக, முதுகெலும்பாக, திட்டங்களைத் தீட்டி இறுதிவரை நடத்தியவர் மாவீரன் நாசர்தான்! இந்த உண்மை நாகிப்புக்கு மட்டுமே தெரியும் இந்த இருவரின் ராணுவக் கூட்டுப் புரட்சிப் பணிகளை, உலகம் புரட்சிக்குப் பின்னாலே எது உண்மை என்பதைப் புரிந்து கொண்டது!

இராணுவத் தலைவர் நாகிப் தொடர்ந்து மன வலிமையுடன் செயல்பட ஏதோ ஓர் அச்சத்தால் தயங்கினார். ஆனால் நாசர், இறுதிவரை மனோ தைரியத்துடன் பணியாற்றியதால் நாசரே ஜனாதிபதி என்ற பொறுப்பை ஏற்றார்!

அதற்குப் பிறகு நாகிப், தனது அரசியல் வாழ்வையே துறந்து மறைந்துவிட்டார். நாசர் ஜனாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டதும், நாட்டை விரைவாகச் சீர்படுத்தினார்.

நாட்டின் விளை நிலங்களை எல்லாம் நில முதலாளிகளிடம் இருந்து மீட்டார். உழைக்காத சோம்பேறிகளிடம் இருந்த மற்ற நிலங்களையும் பறித்து, உழைக்கும் மக்களிடம் வழங்கியதால் நாட்டில் விவசாயப் பெருக்கம் ஏற்பட்டது.

மக்களது உணவுப் பஞ்சமும், அவர்களது பொருளாதார நலிவும் நீங்கி, அவர்கள் இடையே வளம் கொழித்தது.