பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெய்த்துணை

103




திருக்கையும். அவை இரண்டும் நம்முடைய நல்வாழ்வுக்கு வகை செய்கின்றவை. ஆறுமுகத்தையும் வேலாயுதத்தையும் அபயகரத்தையும் தியானம் பண்ணப் பண்ண நம் மனத்திலிருந்து அச்சம் போய்விடும். காலனுக்கும் நாம் அஞ்சாத திண்மை உண்டாகும்.

சூலம் பிடித்துஎம பாசம்
சுழற்றித் தொடர்ந்துவரும்
காலன் தனக்குஒரு காலும் அஞ்
சேன், கடல் மீது எழுந்த
ஆலம் குடித்த பெருமான்
குமாரன் அறுமுகவன்
வேலும் திருக்கையும் உண்டே
நமக்குஒரு மெய்த்துணையே

.

[சூலத்தை ஒரு கையில் பற்றிக்கொண்டு, உயிரை உடம்பினின்றும் பிரித்துக் கொண்டு போவற்காக அதனைத் தொடர்ந்து வருகிற காலனுக்கு ஒரு சமயத்திலும் அஞ்சமாட்டேன்; பாற்கடலின்மீது தோன்றிய ஆலகால நஞ்சை விழுங்கி அமரர்களைக் காப்பாற்றிய சிவபிரானுடைய திருக்குமாரனும் ஆறுமுகமுடைய பெருமானுமாகிய முருகனுடைய வேலாயுதமும், அஞ்சேல் என்று குறிக்கும் திருக்கரமும் அஞ்சுகின்ற அடியார்களாகிய நமக்கு ஒப்பற்ற மெய்த்துணையாக இருக்கின்றன.

ஒருகாலும் என்றது மரணம் வருவதற்கு முன்பும், அது வரும் போதும் என்று கொள்வதற்குரியது. கடல் - பாற்கடல். ஆலம் - நஞ்சு, அஞ்சாமையைச் சொல்லும் பாடலாதலின். திருக்கை என்பதற்கு அபயகரம் என்று பொருள் கொள்ள வேண்டும். வேலும் அதைப் பிடித்த கரமும் என்று கூறுவது அத்துணைச் சிறப்பன்று, இறைவனோடு சார்த்தப் பெற்றிருக்கும் வேலாயுதமும், அதனருகில் உள்ள அபயகரமும் என்று பொருள் கொள்ளலாம். நமக்கு என்றது கருணையினால் முன்னிலையாராகிய நம்மையும் உளப்படுத்திச் சொன்ன உளப்பாட்டுத் தன்மைப் பன்மை. ஒரு- ஒப்பற்ற. வேலும் திருக்கையுமாகிய மெய்த்துணை உண்டு என்றும் கூறலாம். ஆறுமுகத் திருக்கோலத்தில் ஒரு வலக்கரத்தில் வேலும், மற்றொரு வலக்கரத்தில் அபயமும் இருக்கும்; ஆதலின் அறுமுகவன் வேலும் திருக்கையும் உண்டே என்றார்.]