பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயன்

105

பொருந்தி இருக்கின்றன. எழுத்தொலி உண்டாவதற்கு இன்றியமையாத கருவிகள் இன்னவை என்று இலக்கண நூல்கள் கூறுகின்றன. மார்பு, கழுத்து, மூக்கு, தலை ஆகிய நான்கு இடங்களிலும் தோன்றிய எழுத்துக்கள் இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய கருவிகளால் வெவ்வேறு ஒலியாக வருகின்றன. இவைகள் எல்லாம் சொல்லின் ஒலியைப் பொறுத்த அமைப்புகள்.

மனிதன் உள்ளத்தில் நினைந்ததைச் சொல்லிலே சொல்லும் ஆற்றல் பெற்றிருக்கிறான். இது மிக அருமையாக வந்த ஒன்று. அருமையாகக் கிடைத்ததை நல்ல பயன் உள்ள காரியத்தில் ஈடுபடுத்த வேண்டும். பொற்கிண்ணம் ஒருவனுக்குக் கிடைத்தால் அதைப் போற்றிப் பாதுகாத்து அதில் பாலும் சோறும் இட்டு உண்பான்; அல்லது உயர்ந்த விலைக்கு விற்பான், அப்படியின்றி ஒரு சிறு குழந்தையின் கையில் அதைக் கொடுத்தால் பக்கத்து வீட்டுப் பையனுடன் விளையாடும்போது கோபம் வந்தால் அந்தக் கிண்ணத்தைத் தூக்கி எறியும். ஆண்டவன் திருவருட் பெருமையை நான் நன்கு தெரிந்து கொள்ளவில்லை யென்று புலப்படுத்த வந்த மணிவாசகப்பெருமான்,

"மழக் கையிலங்குபொற் கிண்ண மென்றலால்
அரியை என்றுனைக் கருது கின்றிலேன்"

என்று சொல்கிறார். நமக்குக் கிடைத்த வாக்கு அல்லது பேச்சைப் பொற்கிண்ணத்தைப் போல, மாணிக்கத்தைப் போலப் பாதுகாக்க வேண்டும். அவைகளையாவது பணம் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மனிதப் பிறவி வாய்த்தும் ஊமையாகப் போய்விட்டால் அவன் பேச்சைப் பெறுவது இயலாத காரியம். இனி அடுத்த பிறவியில் பெற்றால்தான். இவ்வாறு அருமையாகக் கிடைத்த பேச்சை மிகச் சிறந்த பயன் உடையதாகவும், புண்ணியம் தருவதாகவும் செய்யவேண்டும்.