பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

உள்ளம் குளிர்ந்தது


வர்களாக, வயதில் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். சில துறைகளில் வயசானவர்களே சிறப்படைவார்கள். காரணம்: வெறும் படிப்பு மாத்திரம் போதாது; அநுபவம் உடையலராக இருக்க வேண்டுமென்பதுதான். பால ஜோஸ்யன், விருத்த வைத்தியன் என்ற பழமொழியுண்டு. நீண்டகால அனுபவம் உடைய வைத்தியர்கள் மருந்து கொடுத்தால் நோயாளிக்கு நன்மை உண்டாகும். வெறும் வைத்திய நூல் படிப்பு மாத்திரம் இருந்தால் அவனால் நன்மை உண்டாகாது. ஆகையால், கல்வி அறிவோடு அநுபவம் வேண்டுமென்று கருதி விருத்த வைத்தியனாக இருக்கவேண்டுமென்று சொன்னார்கள்.

உடலுக்கு வரும் நோயைத் தீர்ப்பதற்கு அநுபவ முதிர்ச்சி இருக்கவேண்டும் என்று சொன்னால், அதைவிட அவசியம் உள்ளத்தின் நோயைத் தீர்ப்பதற்குரிய தகுதி. உள்ள மயக்கத்தை நீக்கி ஞானத் தெளிவு அடையச் செய்யும் ஆசிரியர்கள் பல காலம் பல நூல்களைப் பயின்று, பலர் வாயிலாகக் கேள்வி பெற்று, பல சாதனைகளைப் புரிந்து, தம்முடைய அநுபவத்திலும் வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி, கேள்வி ஆகிய இரண்டும் அநுபவத்தினால்தான் நிறைவு பெறும். கல்வி, கேள்வி இல்லாதவர்களும் அநுபவத்தினால் சிறந்து நிற்பதைப் பார்க்கிறோம். மகா ஞானியாகத் திகழ்ந்த இராமகிருஷ்ண பரமஹம்சர் கல்வி கேள்வி மிக்கவர் அல்லர். ஆயினும் அவருடைய அற்புதமான உபதேசங்கள் வேதாந்த உண்மைகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. அவை அநுபவத்தால் உணர்ந்தவை.

ஆகவே ஞானோபதேசத்திற்கு அடிப்படையாக நிற்பது அநுபவம். அந்த அனுபவம் எளிதில் மனிதனுக்கு வராது. பலகாலம் சாதனம் செய்து இடையிலே வரும் தடைகளை வென்று வென்று தெளிவு பெற்று அப்பால் பெறவேண்டும்.