பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இராப்பகல் அற்ற இடம்

1

அநுபவமும் கருணையும்

ந்தர் அலங்கார மாலையின் குஞ்சமாக ஆறு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றையே இப்போது நாம் பார்க்கிறோம். அதன் முதல் பாடல் எம்பெருமானுடைய சொரூபத் தியானத்திற்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது. அதைப் பார்த்தோம். அருணகிரிநாதப் பெருமான் தம்முடைய அநுபவமாக அதைச் சொன்னார். அவனுடைய திருவடி முதலியன தம்முடைய உள்ளம் குளிரக் குதிகொண்டன என்று சொன்னார். அப்படிச் சொன்னவுடன் திரும்பிப் பார்த்தார். ஆயிரக்கணக்கான மக்கள் எம்பெருமானுடைய நிலையை உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலபேர் அவனுடைய திருவடித் தியானம் கைகூட வேண்டுமென்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்; எது வழி என்று தெரியாமல் திண்டாடுகிறார்கள். அதைப் பார்த்தவுடன் அவர்களுக்கு வழிசொல்லிக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. 'நாம் பெற்ற இன்பத்தை மாத்திரம் சொல்லி அந்த எக்களிப்பில் பேசிக் கொண்டிருக்கிறோம். இவர்களுக்கு வழி காட்ட வேண்டாமா?' என்ற நினைவு வந்தது. அந்தக் கருணையினால், "இறைவனே, உன்னுடைய அற்புதமான வடிவத்தை உள்ளத்தில் வைத்துத் தியானம் பண்ணுவதற்கு எனக்கு ஆசையாக இருக்கிறது" என்று நினைக்கிறவர்களுக்கு ஏற்றபடி ஒரு விண்ணப்பத்தை அமைத்தார்.