94 ♦ அறிஞர் அண்ணா
இவை எல்லாவற்றின் கூட்டே ஆட்சி! சில மண்டபங்களில் மட்டுமே செயல்படுகின்ற காரியமல்ல ஆட்சி!
நாட்டு ஆட்சி வீட்டுக்கு வீடு காணப்படும் பண்பைப் பொறுத்து இருக்கின்றது!
இல்லாமை, பேதமை நீக்கப்பட்டு--வலியோர் எளியோரை வாட்டிடும் கொடுமை ஒழிக்கப்பட்டு--எல்லோருக்கும் ஏற்றம்--இன்பம்--உறுதியளிக்கப்பட்டு--"நாடு பூக்காடாய் திகழ்ந்திட வேண்டும்" என்ற ஆசையால் உந்தப்பட்டு "இந்த நிலை பெறுவதற்கான பணியில் ஒரு சிறு பகுதியையேனும் நாம் செய்து முடிக்க வேண்டும்" என்ற ஆவலுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளேன்.
முன்பு தரிசாகக் கிடந்த இடத்தை விளை நிலமாக்கிட வியர்வை சிந்துவோர்--குறை அளவு இயங்கி வந்த இயந்திரத் தொழிற்சாலையை, முழு அளவு இயங்கிடச் செய்யப் பாடுபடுவோர் மக்களின் வசதிப் பெருக்கத்துக்காக உற்பத்தி, வினியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டு--அதனை நேர்மையான முறையில் நடத்திடுவோர்-- இவர்களெல்லாம் என் நண்பர்கள்! என் வணக்கத்துக்குரியவர்கள்!
உற்பத்தித் துறைக்கு முட்டுக்கட்டை இடுவோர்--உற்பத்திக்காகப் பாடுபடுவோரின் வயிற்றில் அடிப்போர்--இவர்கள் எனக்கு மட்டுமன்று-சமூகத்துக்கே பகைவர்கள்!
விலையை ஏற்றி விடுவோர்-விளைந்ததைப் பதுக்கிக் கொள்வோர்--நாட்டை நாசமாக்கும் நடமாடும் நோய்கள்!
ஊழல்-ஊதாரித்தனம், இலஞ்ச-லாவண்யம் ஆகிய கேடுகளைச் செய்வோர்--நாட்டின் அவமானச் சின்னங்கள்!
நண்பர்களே! நாட்டின் பகைவர்கள்--சமூக விரோதிகள் ஆகியோரிடமிருந்து நாட்டைக் காத்திட வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது