உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 95
கேடு களைத்திட--நாடு வாழ்ந்திட--சுயநலம் மடிந்திட--பொதுநலம் மலர்ந்திட--தொண்டாற்றுவோம் வாரீர்! வாரீர்!" என்று அழைக்கிறேன். (15-3-1968 அன்று வானொலியில் ஆற்றிய உரை)
27. நம் - இந்தியத் தொழிலாளியின்
நிலை
உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் மக்கள். நம்மை விடக் குறைவாகவே உழைக்கின்றார்கள்; ஆனாலும், நம்மைவிட வசதியான நல்வாழ்வைப் பெற்றிருக்கிறார்கள்; ஏன் அப்படி?
இங்கிலாந்தில் உள்ள ஒரு தொழிலாளிக்குக் குடியிருக்க சுகாதாரமான வீடு கிடைக்கிறது; அந்த வீட்டில் ஓய்வாக இருக்கும்போது "உலகம் என்ன சொல்கிறது" என்பதைக் கேட்க ரேடியோவும், படித்து அறிய பத்திரிக்கைகளும் இருக்கின்றன!
இரஷ்யாவில் உள்ள ஒரு தொழிலாளியின் மனைவி கற்பிணியானால், குழந்தை பிரசவிப்பதற்கு மூன்று மாதம் முன்பிருந்தே--பிரசவித்து மூன்று மாதம் வரை -- சர்க்கார் செலவிலேயே மருத்துவ வசதிகள் செய்து தரப்படுகின்றன!
இப்படி ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் வாழ்க்கை வசதிகள் கிடைக்கும்போது, நம் நாட்டு மக்களுக்கு இது. கிடைக்காது போவானேன்?
'நம் நாட்டு மக்கள்தான் மிகக் கடினமாக உழைப்பவர்கள்' என்று சொன்னேனல்லவா? அப்படி இருந்தும் அவர்களால் நல்வாழ்க்கையைப் பெற முடியவில்லை என்றால், ஏன்?
நாட்டு மக்கள் இத்தனை உழைத்தும், நல்வாழ்வு பெற முடியாமலிருப்பதற்குக் காரணம், நாடு வளமற்றதா என்றால் அதுவும் இல்லை!