பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 ♦ அறிஞர் அண்ணா



நாகப் பாம்பை படுக்கை அறைக்குள் விட்டுவிட்டு, 'இது நாகப் பாம்புதான்; ஆனால் ஒன்றும் செய்யாது; இதன் ஆட்டத்தை எனது மனைவி நாகவல்லி பார்த்துக் கற்றுக் கொள்வதற்காகத்தான் கொண்டு வந்திருக்கிறேன்' என்பது போல் இருக்கிறது அவர்கள் கூறுவது!

பத்து வருடங்களுக்குமுன், நடுத்தர வகுப்பினரையே, 'வேண்டாம்' என்றவர்கள், இன்று முதலாளிமார்களையே அழைக்கின்றனர்; 'நடுத்தர வகுப்பார் ஆதரவும் வேண்டும் என்று உணர்ந்து வருகிறார்கள்!

ஆயிரம் தவறுகள் செய்வார்கள்; ஆனாலும், எவ்வளவு அவசரமாகத் தவறுகளைச் செய்வார்களோ அவ்வளவு அவசரமாகத் தவறுகளைத் திருத்திக் கொள்ளக் கூடியவர்கள் கம்யூனிஸ்டுகள்! இந்திய அரசியலிலேயே, செய்கிற எண்ணற்ற தவறுகளை மிக மிகத் திருத்திக் கொள்ளக்கூடியவர்கள் கம்யூனிஸ்டுகள்தான்!” 'நம்நாடு'

முதலாளித்துவத்தின் முடிந்த கொள்கை !

ஒரு சிலரின் ஆசைக்கு மிகப் பலரைப் பலியாக்குவது தான் முதலாளித்துவத்தின் முடிந்த கொள்கை! சக்திக் கேற்ற உழைப்பு - தேவைக்கேற்ற வசதி என்பதுதான் சமதர்மத் திட்டத்தின் அடிப்படை நோக்கம்!

மாளிகைக்கு அருகே மண்மேடு இருக்கக் கூடாது! மந்தகாச வாழ்வுக்கருகே மனிதப் புழுக்கள் உலவக் கூடாது! சோம்பேறிச் சீமைகள் ஒரு புறமும், சோர்ந்து விழும் அனாதைகள் மற்றொரு புறமும் இருக்கக்கூடாது! இதற்குப் பெயர்தான் சமதர்மம்!

சாதி மத-குல பேதங்கள், நம் மக்களை முன்னேற ஓட்டாதபடி மூச்சுத் திணறும்படி - முதுகெலும்பை முறிக்கும்படி அழுத்துகின்றன! இந்நிலையில், நம் நாட்டில் சமதர்மம் மலருவது எங்கே? சமத்துவம் தோன்றுவது எப்படி? அதன் முழுப் பயனாகிய தோழமையைக் காண்பது எங்ஙனம்?