பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 75



கண்ணீர் பொழிந்தபடி--பெரு மூச்சுடன்--அடிமைகள் இருந்து வந்தனர்-எடுபிடிகளும் இருந்தனர்!

உழவர் உழன்று வந்தனர். தொழில் செய்வோர் பாடுபட்டு வந்தனர்.

எது செய்து வாழ்வது என்று தெரியாது திகைத்து அலைந்து கொண்டிருந்தவர்களும் இருந்து வந்தனர்.

அவர்களின் மனப்போர் மண்டிலம் ஆண்ட மன்னர்கள் நடாத்திய போர்களைவிட அதிகம்--ஆனால்--வெளியே தெரியாது!

வாழ்வுக்காக அவர்கள் நடத்திய போர்களும் பல--ஆனால் வரலாற்றிலே அவர்கட்கு போதிய இடம் தரப்படவில்லை.

மக்களின் சார்பாகப் பாடுபடும் மாண்பு வளர்ந்துள்ள இதுபோதுதான், வரலாற்றினைப் புதுப்பித்து--மக்களை முன்னால் வைத்து--சம்பவங்களைத்ன்தொகுத்திடும் முறை ஓரளவு வளருகிறது! வளர வேண்டிய அளவு அதிகம் இருக்கிறது!

ஏழையின் மனதிலே நெடுங்காலமாக உருவாகிக் கொண்டுவந்த கோபம், எரிமலை நெருப்பாகக் கக்குவது போல சில வேளைகளில், புரட்சிகளாக மாறின; ஆனால் தெளிவான திட்டம் கிடையாது--கொள்கை வளரவில்லை! 'வேறு வழியில்லை' என்ற போது, 'வெட்டு-குத்து' என்றனர். வெட்டப்பட்டனர்! மாண்டவர் போக மீதமிருந்தோர் மீண்டும் செக்கு மாடுகளாக ஆக்கப்பட்டனர்.

உழைப்பாளிகளின் மனக் குமுறல்கள் வெடித்த சம்பவங்கள் பல நாட்டு வரலாறுகளிலே சிற்சில காணப்படும்; ஆனால் அவைகள் மகா அலெக்சாண்டரின் வெற்றிப் படைகள் கிளப்பிய தூசியால் மறைக்கப்பட்டு விட்டன!