பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiv

கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8

 சொல்விளக்க நுட்பங்களால் சுவையேற்றுவதிலும் முடியரசனாரின் தனித்திறம் பளிச்சிடுகிறது.

ஒற்றுமை, ஒருமை இரண்டும் ஒன்றா? இரண்டுக்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டைப் பாவலர் கூறுகிறார்:

"ஒன்றுடன் மற்றொன்று இணைவது ஒற்றுமை.
ஒன்றினுள் ஒன்று பொன்றுவது ஒருமை
இணைந்தும் தனித்தும் இயங்குவது ஒற்றுமை
அணைந்தபின் ஒன்றாய் அமைவது ஒருமை
அடுக்குத் தொடர்போல் அமைவது ஒற்றுமை
இரட்டைக் கிளவியென் றிருத்தல் ஒருமை.”

சொல் விளக்கச் சுவை வழங்குவதோடு, சொல்வளப் பெருக்கத்திற்கும் தமது ஆழ்ந்தகன்ற கல்விப்பரப்பால் நூல் முழுதும் வழியமைத்துள்ளார் முடியரசனார்.

'உதுக்காண், அரத்தம், பொந்திகை' எனப் பழந்தமிழ்ச் சொற்கள் பலவும் இந்நூலுள் உயிர்கொண்டு உலவுகின்றன.

கதைப்போக்கில் பாடற்போட்டி ஒன்று வருகிறது. 'உண்டாலம்ம' பாடலை இளம்பெருவழுதி எழுதி முதற்பரிசு பெறுவதாகக் கதையோடு புறநானூற்றைப் பொருத்தி விடுகிறார் பாவலர்.

இரண்டாம்பரிசுபெறும் கரும்பார்குழலியின்பாடலாகச் சங்க இலக்கியச் சாயலில் முடியரசனார் வழங்கும் பாடல் நடைமுறை வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

"மரக்கலம் நடுக்குற அலைக்கும் மாகடல்
புரக்கும் எனினும் பொங்குங் காலை
அழிப்பன பலவே அகல்வான் மிசையெழில்
கொழிக்கும் பாலொளி அளிக்கும் வெண்மதி
புணர்ந்தார்க் கின்பம் புரியும் அதுதான்
தணந்தாாக் குறுதுயர் தரூஉம் மறுநாள்
நல்லன யாவும் நல்லன அல்ல
ஒருகால் இனிதென உணரும் ஒன்றே
மறுநாள் துனிதரும் அறிகதில் மனனே.”