பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௩௬

ஊன்றுகோல்


குலம்பார்ப்பர், குவிசெல்வ வளம்பார்ப்பர்,
குடிபார்ப்பர், சீரும் பார்ப்பர்,
நலம் பார்ப்பர், கலன்பார்ப்பர், நடந்துவரும்
நடைபார்ப்பர், உடையும் பார்ப்பர்,
நிலம் பார்ப்பர், நாகரிக மனைபார்ப்பர்,
நிகழ்மனத்தில் அறிவு, பண்பு
நலம்பார்க்கும் நிலைமட்டும் மறந்திடுவர்
நகரத்தார் நிலைதான் என்னே ! 3

மகனுக்குத் திருமணநாள் வாராதோ
எனஈன்றார் வருந்தி நிற்க,
தொகை மிக்க நூல்வல்லார் அதையுணர்ந்து
‘துயர் விடுக என்பின் வந்தார்
மகிழ்வுக்கு வழிசெய்க மணஞ் செய்க
மற்றெனக்குத் தேவை யில்லை,
[1] பகலுக்கும் பயின்றிடுவேன் சபைவளரப்
பணி செய்வேன்’ எனப்ப கர்ந்தார் 4

உறுபிணியாற் கால்தளர்ந்த கதிரேசர்
உளந்தளரார், ஊன்று கோலின்
பெருவலியால் நாடெங்கும் நடந்துலவித்
தமிழ்பரப்பி, அதனைப் பேணாச்
சிறுசெயலால் தளர்ந்திருந்த தமிழ்மாந்தர்
செயலாற்ற ஊன்று கோலாய்
வருபவர்தாம் இவரென்று தெளியார்தாம்
மகட்கொடைக்கு மறுத்து வந்தார். 5


  1. நாள் முழுமைக்கும்