பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம் 31 உள்ளே, இன்னும் அழுகையை விடாத அண்ணியைப் போய்ப் பார்க்க நினைத்ததங்கம்மா, ரோஷக்காரரான தந்தை, அம்மா சொன்னது போல ஏதாவது செய்தாலும் செய்து விடலாம் என்று நினைத்தவள் போல், பித்துப் பிடித்த தன் தலையை உசுப்பி விட்டுக் கொண்டாள். பின்னர், அம்மாவை நோக்கி நகர்ந்தாள். அத்தானைப் பார்த்துக் கொண்டே நகர முடியாமல் நகர்ந்தாள். அவள் கண்கள், ஆண்டியப்பனின் கண்களுடன் ஒட்டிக் கொள்ளப் போவதுபோல் துடித்தன. அவனருகே நிற்கப் போகிறவைபோல், கால்கள் இழுத்தன. அவனைக் கிள்ளி விளையாடிய கைகள், இப்போது ஒன்றை ஒன்று நெரித்துக் கொண்டன. அவன் கோதிவிட்ட தலைமுடி, இப்போது பாவாடை மாதிரி, காற்றில் விரிந்தது. 'பால் பொங்குற வேளயில... பானை உடைஞ்சிட்டே மச்சான்... என்று மனதுக்குள்ளே ஒப்பாரி வைத்துக் கொண்டு, நீ யாரோ... நான் யாரோன்னு ஆயிட்டோமே என்று மனதுக்குள்ளேயே மாரடித்துக் கொண்டு, தான் யாரோ என்று தவித்தவள்போல், தாயின் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தாள். மாடு போன வேகத்தில் மாமன் மகள் போவதை நிலைகுத்திய பார்வையுடன், நிலைகுலைந்த உள்ளத்துடன், அவள் போனது ஒரு அடியா அல்லது ஒரேயடியா...' என்று கணக்குப் போட்டுக் கொண்டிருப்பது போல், அவள் கால் பாதத்தையும், உச்சந் தலையையும் உற்று உற்றுப் பார்த்த ஆண்டியப்பனை, மாசானம் உசுப்பினார். "ஏண்டா... பித்துப் பிடிச்சி நிக்குற...? பரமசிவம்... இந்தா பிடின்னு' தலையக் குடுத்துட்டான்... தானா மாட்டிக்கிட்டான். இத விடப் பேர்றதுல்ல. வீடு புகுந்து மாட்டப் பிடிச்சவன் கையில காப்பு மாட்டாட்டா... நான் மாசானம் இல்ல..." மாணிக்கம் பி.ஏ.பி.டி.யும் ஆறுதல் சொன்னான். "கவலப்படாத ஆண்டி... இந்த விவகாரத்த வச்சே... நம்ம ஊர்ல இருக்கிற ஒவ்வொரு விவகாரத்தையும் தீர்த்துடலாம். நாங்க இருக்கது வரைக்கும் நீ கவலைப்பட வேண்டாம்..." ஆண்டியப்பன், இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகளைப் பார்த்தான். அங்கே வந்திருந்த ஏழெட்டுப் பேருமே படித்தவர்கள். ஊர் நீதிக்காக, உயிரையே பணயம் வைக்கத் தயாராக இருக்கிறவர்கள். இவர்கள் இருக்கும்வரை, அவன் அஞ்சவேண்டியதில்லை. சொல்லப் போனால், ஊர் மோசடிகளை அம்பலமாக்கப்போகும் போராட்டத்தில் அவன் மாடு தற்செயலாகப் போயிருக்கிறது. அவ்வளவுதான். சற்று நேரம் வரை, மாடு கொண்டு போகப்பட்ட போது, பண்ணையாட்கள் தன்னையே கழுத்தில் கயிற்றைக் கட்டி, கால்களுக்கு இணையாக கைகளையும் ஊன்ற வைத்து. கொண்டு போவது போல் சிறுமைப்பட்ட