பக்கம்:எக்கோவின் காதல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ❖

கவியரசர் முடியரசன்

83

"கேள்! உற்சாகமாகக் கேள்! நான் சென்னையில் பைத்தியக்காரனைப் பார்க்கச் சென்றேன்....”

"என்ன சுந்தரம்! நான் கேட்பதைவிட்டுப் பைத்தியக்காரனையும் அவனையும் இவனையும் பற்றிச் சொல்லுகிறாயே” என்று கொஞ்சம் பதற்றத்துடன் கேட்டான்.

“அட, என்னப்பா! சொல்வதற்குள் துடிக்கிறாயே! விவரமாகச் சொல்ல வேண்டாமா?

“விவரமாகச் சொல்லுவதற்குப் பைத்தியக்காரனைப் பார்க்கப் போனேன் என்று தான் சொல்ல வேண்டுமா?”

“கேளப்பா! “பைத்தியக்காரன்" சினிமாவைப் பார்க்கச் சென்றிருந்தேன்.”

“திரைப்படத்தைப் பற்றியா சொல்லுகிறாய்?”

“ஆமாமா! கொட்டகை வாசலில் ஒரே கூட்டம்! வித விதமான 'தோகை மயில்கள்' உள்ளே சென்று கொண்டிருந்தன. அந்த மயில் கூட்டத்தில் என் கோகிலத்தையும் கண்டேன். ஆம் கோகிலந்தான்! அவள் சிவப்பிற்கும் அந்தக் கருப்பு ஆடைக்கும் என்ன அழகு தெரியுமா? அரைகுறையாகப் பின்னித் தொங்க விடப்பட்டிருந்த அந்தச் சடை - அலட்சியப் பார்வை - எவரையும் கிறு கிறுக்கவைக்கும் புன் சிரிப்பு இவை என்னை அப்படியே சிலைபோல் நிற்கச் செய்துவிட்டன. அங்கிருந்த மயில்களின் பார்வை எல்லாம் இந்தக் குயிலின் பக்கந்தான். வேடர்களின் கண்களைப்பற்றிக் கூறவா வேண்டும்!

'டிக்கெட்' கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அவள் எந்த வகுப்பு 'டிக்கெட்' வாங்குகிறாள் என்பதை அவள் கை நீட்டிய