பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேர்தலில் காஞ்சித் தொகுதியில் அண்ணா வெற்றி வாயப்பை இழந்தார் எனினும் தி.மு.க. சார்பில் 50 பேர் வெற்றி பெற்று, பிரதான எதிர்க்கட்சியாகப் பேரவையில் அமர்ந்தோம்.

1957 ஆம் ஆண்டு கழகம் பெற்ற வெற்றி; ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது என்றால், 1962ல் கழகம் பெற்ற வெற்றி அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது எனலாம். கழக வளர்ச்சியை முடக்க என்ன செய்யலாமெனத் திட்டம் தீட்டத் தொடங்கினர் டெல்லிப் பட்டணத்தில்!

அதிர்ச்சியின் அளவைக் காங்கிரசுக்கு மேலும் அதிகப்படுத்தும் விதமாக அப்போது திருவண்ணாமலையில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில், பெருந்தலைவர் காமராசர் அவர்களே நேரடியாக இறங்கிப் பணியாற்றிய நிலையிலும் தி.மு.க. வேட்பாளர் ப. உ. சண்முகம் அவர்கள் வெற்றி பெற்றார்.

இனி தி.மு.க.வை ஒழித்துக் கட்டாமல் விடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடமும் – தமிழகக் காங்கிரஸ் தலைவர்களும் கூடிப் பேசி; கொண்டு வந்தனர் ஒரு சட்டத்தை!

அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால்; தி. மு. கழகம் பிரிவினைக் கொள்கையைப் பேச முடியாது – பேசினால் கழகமே இருக்க முடியாது – இப்படி ஒரு சூழ்நிலையில், “சுவரா? சித்திரமா?” என்ற கேள்விக்கு விடை காண ஆழ்ந்த சிந்தனையில் கழகத்தினர் இருந்தபோது; அதுபற்றிய விவாதம் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துக் கொண்டிருந்தபோது – தி.மு. கழகத்தின் பொதுக்குழு 1963ம் ஆண்டு சூன் திங்கள் 8, 9, 10 நாட்களில் கூட்டப் பெற்றது.

அந்தப் பொதுக்குழுவில் இந்தச் சிக்கலான பிரச்னைக்குத் தீர்வு காண ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டுமென்று விரும்பிய அண்ணா அவர்கள், அக்குழுவில் அவர் பேச எண்ணியதை முன் கூட்டியே ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் தனது கைப்படவே எழுதி வைத்துக் கொண்டார். பொதுக்குழுவில் பேசும்போது பெரும்பகுதி; அவர் தன் கைப்பட எழுதி வைத்திருந்ததை அடிப்படையாக வைத்தே கருத்துகளை அள்ளிப் பொழிந்தார்.