இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எதிர்பார்த்த தில்லையவள் வடநா டென்னும்
எமலோகத்துக்கன்பன் செல்வா னென்றே!
அதிர்ந்த தவள் உள்ளந்தான் ! பயணஞ் செல்லும்
அணிமுத்து வணிகரொடு கண்டபோது,
விதிர்விதிர்த்த மலர்மேனி வியர்த்துப் போக
வெம்பினாள்; வெடித்துவிடும் இதயத்தன்னைப்
புதுமலர்கை யால் அழுத்தித், தலையில் மோதிப்
புண்ணுளத்தில் செந்நீரைக் கண்ணாற் பெய்தாள்
விடைகேட்கும் பொன்முடிக்குத், திடுக்கிட்டஞ்சும்
விழிதானா ? விழியொழுகும் நீர்தானா ? பின்,
இடைஅதிரும் அதிர்ச்சியா ? மனநெருப்பா?
எதுவிடை ? பொன்முடி மீண்டும் மீண்டும் மீண்டும்
கடைவிழியால் மாடியிலே கனிந்திருக்கும்
கனிதன்னைப் பார்த்துப்பார்த் தகன்றான். பாவை
உடைந்து விழுவாள், அழுவாள் கூவி!
"உயிரே நீர்பிரிந்தீரா" என்று சோர்வாள் !
43