பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

இதற்கான சட்டம் டில்லியில் தயாராகிவருகிறது. இதற்கும் நமது பிரச்சாரம்தான் முக்கிய காரணமாகும்.

மண வாழ்க்கையில் இருவரும் ஒன்றுபட்டு வாழமுடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டால், அந்த நிலைமையில் அவர்கள் விவாக விடுதலை பெறும் உரிமை இருக்கவேண்டும் என்று நாம் கூறிவந்தோம். நாம் இப்படி கூறிய நேரத்தில் பலரும் ஏளனம் செய்தனர். ஆகாதவேலை, தகாதகாரியம் என்றுகூடக் கூறினர். கட்டிய மனைவிக்கு விடுதலை உரிமை தருவதா? என்றெல்லாம் ஆர்ப்பரித்தனர்.

இவைகள் அத்தனையையும் தாங்கி, நாம் தொடர்ந்து செய்துவந்த பணி இன்று பலன்தர ஆரம்பித்துவிட்டதே!.

எத்தனையோ குடும்பங்களில் நாம் கணவனால் கவனிக்கப்படாத மனைவியரைக் காண்கிறோம். கட்டிய மனைவியைக் கண்ணெடுத்தும் பாராது, விலைமாதரிடமே திரிந்து வரும் வீணர்களால் மனம் வெதும்பித் துடித்திடும் பெண்களையும் நாம் பார்க்கிறோம். ஆகவேதான் கணவனால் கொடுமைப்படும் மனைவியும் சரி, மனைவியினால் தொல்லைக்கு ஆளாகும் கணவனும் சரி, தங்களுக்குள் பிடித்தமில்லாத போது, விவாகரத்து செய்துசொள்ளும் உரிமை பெற்றாக வேண்டும் என்று நாம் வலியுறுத்தி வந்தோம். விவாகரத்துரிமை இருந்ததால், பொருத்தமற்ற திருமணங்கள் தவறுதலாக நடந்துவிட்டாலும் பின்னர் அதனைத் திருத்திக் கொள்ள வழிவகை பிறக்க முடியும். பிடித்தமற்றவர்கள் காலமெல்லாம் கூடி வாழ்வதென்பது நடவாத காரியந்தானே. என்வே பிடித்தமற்றவர்கள் விவாகரத்து கோரி விடுதலைபெறும் உரிமையைப் பெறுவது நன்மைதானே!

விவாகரதன் உரிமை வழங்கும் சட்டம் அமுலாக்கப் பட்டுவிட்டால், கண்டபடி திரியும் கணவனை மனைவி தட்டிக்கேட்டு திருந்தாவிடின் விவாக விடுதலை பெற்றுக் கொள்ள முடியும். குடிகாரக் கணவனின் கொடுமைக்கு,