பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்துடன் வாழ்ந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் நாம் என்பதை மக்கள் உணர்ந்து, இனத்தால் ஒன்றுபட்டு வாழும் முறையை மக்களிடையே எங்கள் கழகம் ஏற்படுத்தி வருகின்றது.

நாம் திராவிடர், நமது இனம் திராவிடம், நமது கலை கலாச்சாரம் இவையிவை என்பதை மக்கள் நன்றாக உணர வேண்டும். அப்போதுதான் பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மனப்பான்மை வேறோடு அழியும். மதமூட நம்பிக்கைகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். கருத்தற்ற கண்மூடிப் பழக்கவழக்கங்களும் மாய்ந்தொழியும். ஆகவே நாமெல்லாம் திராவிடர், நமது இனம் திராவிடம் என்ற உணர்ச்சி மக்களிடையே ஏற்பட்டுப் பெருகி திராவிட சமுதாயம் நல்வாழ்வு வாழ வழி வகுப்போம்.

நாம் எந்தெந்தக் கொள்கைகளை வலியுறுத்திப் பாடுபட்டு வருகிறோமோ அவைகளில் சில இன்று சட்டமாகி வருகின்றன என்று குறிப்பிட்டேன். இதனால் நமது பணி நாட்டு மக்களுக்கு மிகவும் தேவையானது, அவசியமானது என்பதை அறிகிறோம். நமது எண்ணம் ஈடேறியதைக் கண்டு மகிழ்கிறோம்.

இங்நிலையில் நாம் அறிவுத் துறையில் முன்னேறவும் சமுதாயம் சீர்திருந்தவும் அடிப்படையான இத்தகைய சீர் திருத்தத் திருமணங்களைத் தொடர்ந்து செய்துவர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.