பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

நடந்து, காமக் களியாட்டங்களில் ஈடுபட்ட மற்றக் கடவுள்களையும் திருமணக் காலங்களிலே எண்ணுவதும் கூடாதே!

இவைகளை நாம் கூறும்போது சில ஆத்திக நண்பர்களுக்குக் கோபம் ஏற்படலாம்! கோபம் ஏற்பட்டு என்ன பலன்? நாங்களாகக் கதைகட்டி எதையும் கூறவில்லையே? நாங்கள் எடுத்துக்காட்டி விளக்குவதும், ஆபாசங்கள் என்று கூறிக் கண்டிக்கும் ஆண்டவன் திருவிளையாடல்களும் கற்பனைகள் அல்லவே அல்ல! அவைகள் அத்தனையும் பக்தர்கள் பக்தியோடு படித்துப் பாராயணம் செய்து வரும் புராணங்களில் காணப்படுபவைகள் தான் என்பதை ஆத்தீக நண்பர்கள் உணர்ந்து திருந்த வேண்டுகிறேன். கடவுள் என்றும், மதம் என்றும், சாஸ்திர சடங்குகள் என்றும், மக்கள் தங்கள் காலத்தையும், கருத்தையும்,நேரத்தையும், நினைப்பையும், உழைப்பையும், ஊக்கத்தையும், பணத்தையும், பகுத்தறிவையும் சிறிதும் பயன்படுத்தாது பாழாக்குவதைத் தடுத்தாகவேண்டும்!

பழைய காலத்தைப் போல நாம் நடக்க முடியாது. நடக்கத் தேவையுமில்லை. புதிய கருத்துக்களைத் தைரியத்துடன் கவனித்து ஏற்று புதுவாழ்வு நடத்த நம்மை நாம் தயாராக்கிக் கொள்ள வேண்டும். மக்களைப் பழமைப் பிடியிலிருந்து மீட்டு, பகுத்தறிவுப் பாதையில் நடத்திச் செல்ல திராவிட முன்னேற்றக்கழகம் பெரிதும் பாடுபட்டு வருகின்றது. பழமைக் கருத்துக்களையும், மத மூடநம்பிக்கைகளையும், அர்த்தமற்ற சடங்குகளையும். கண்மூடி வழக்கங்களையும் மக்கள் அடியோடு விட்டொழிக்க வேண்டுமென்று தி.மு.க. பலமாகவே வற்புறுத்தி வருகின்றது.

சுயமரியாதைப் பிரச்சாரந்தான், சமுதாய சீர்திருத்த முன்னேற்றந்தான் தி. மு.கழகத்தின் அடிப்படை வேலையாக கருதப்பட்டு வருகிறது.