பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

காரணமும் இதுவே. "செந்தூர் வேலாண்டி—" என்று பொருள் விளங்கப், பாடும்போது, இன்ன விஷயமாகப் பாடப்படுகின்றது என்று புரிந்துகொண்டு பூரிக்கின்றனர்.

இசை விருந்தை இன்று அளித்துக்கொண்டு வரும் தோழியர் எம். எஸ். சுப்புலட்சுமி தியாகராயர் கீர்த்தனங்களைப் பல வருடப் பாடப் பழக்கத்துடன், பாடிக்கொண்டிருந்தபோது, வித்துவான்களுக்கு அறிமுகமாகி இருந்தாரே யொழிய, நாட்டுமக்களுக்கு அறிமுகமாகவில்லை. ஏன்? நாட்டினர் எம். எஸ். எஸ். பாடுவது பிரமாதமான வித்தை அடங்கிய பாட்டு என்று கேள்விப் பட்டர்களே யொழிய, அதன் சுவையை அனுபவிக்க முடியவில்லை. ஆனால், அதே எம். எஸ், எஸ், "மனங் குளிர" என்ற செந்தமிழ் இசையைப் பாடியதும், தமிழரின் மனமெல்லாம் குளிர்ந்தது. இசை நம்மை இழுத்து சகுந்தலை கண்ட சோலை, சாலை, பசு, மான், கன்று, குயில், மயில் ஆகியவற்றை நமது மனக்கண் முன் நிற்கும்படிச் செய்தது. இசை இன்பத்தை மக்கள் முழுவதும் அடைய முடிந்தது.

தமிழ் இசைக்கு ஆதரவு இருக்குமா என்று கேட்கும் பேர்வழிகள், இசையரசு தண்டபாணி தேசிகரின் தமிழ் இசை, மக்களை எவ்வளவு உருக்குகிறது. பொருள் விளங்க, உணர்ச்சி ததும்ப, அவர் நமது தமிழில், நம்மிடம் பாடுவதால் மக்கள் உருகுவது இருக்கட்டும்; தேசிகரே உருகுவதைக் காணலாம், தமிழ் இசை பாடும் போது!

மதுரை மாரியப்ப சுவாமிகள், சிதம்பரம் ஜெயராமன், திருவாரூர் நமச்சிவாயம் ஆகிய இசைமணிகளின் ஒலி, நமது தமிழாக இருப்பதால் நமது நெஞ்சை அள்ளுவதைக் கூறவேண்டுமா?

நம்மவரின் நெஞ்சில் நேராகச் சென்று இன்பத்தைத் தர, தமிழ் இசையினால் மட்டுமே முடியும். அத்தகைய தமிழ் இசையை வளர்க்க, பாடகர்களும், கழகங்களும்