பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

முடியுமே தவிர, சாஹித்தியம் வேறு மொழியிலே இருந்தால் முடியாது. நாதம் காதைக் கவரும்; கருத்துக்கு என்ன அளிப்பது? தமிழனுக்குத் தமிழ்; தெலுங்கருக்குத் தெலுங்கு; வடவருக்கு வடநாட்டு மொழியில், சாஹித்தியம் அமைத்தால்தான், அந்த இசையைக் கேட்டதும் அவர்கள் இன்புற முடியும்.

இப்போது தமிழ் நாட்டிலே நடைபெறும் கச்சேரிகளில் தமிழ் இசை எவ்வளவு விரும்பப்பட்டு வருகிறது. என்பதையும் நாம் விவரிக்கத் தேவையில்லை.

தோழர் தியாகராஜ பாகவதரின் பாடல்கள், இன்று தமிழருக்குத் தெவிட்டாத விருந்தாக இருக்கின்றன. அவருடைய குரல் அமைப்பு மட்டுமல்ல அதற்குக் காரணம்; அவர் தமிழ்ப் பாட்டுக்களைத் தெளிவாகக் கேட்கும் போதே, பொருட் சுவையை மக்கள் ரசிக்கும் விதத்திலே பாடுவதுதான் முக்கியமான காரணம். சங்கீத வித்துவான்கள் என்ற சன்னத்துக்கள் பெற்று விளங்குவதாகக் கூறப்படும் பேர்வழிகளிடம் உள்ளவித்தை, பாகவதரிடம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றியோ, 'சுரம்' போடுவதில் அவர் இன்னாரைவிடக் குறைந்த திறமை உள்ளவரா என்பது பற்றியோ, மக்கள் யோசிக்கவில்லை. அவசியமுமில்லை. பாகவதர் "மாயப் பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை" என்று பாடினால், அது வீட்டிலே, வெளியிலே, இரவிலே, பகலிலே கிழவர் குழந்தை உள்பட, பாடும் பாட்டாகி விடுகிறது. அழகும்,அழுத்தந் திருத்தமும். பொருட்சுவையும் ததும்ப, உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ' என்று பாகவதர் பாடினால், நாட்டினர் அதனைப் பாடுகின்றனர். காரணம் அவர் பாடுவது புரிகிறது. கேட்பவர் களிக்கின்றனர். அந்த இசை, கேட்போர் உள்ளத்திலே சென்று தங்குகிறது.

தோழியர் கே.பி. சுந்தரம்பாளின் இசைக்குத் தமிழர், தமது செவியையும் சிந்தனையையும் பரிசாக அளித்த