பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

கருவிகளை ஏற்றிக் கொண்டு, பல நாடு சென்று, பாடி மகிழ்வித்துப் பரிசு பெற்று வாழ்ந்தனர்.

இன்னின்ன காலத்துக்கு இன்னின்ன இன்னிசை பாடுதல் பொருத்த மென்றறிந்து பாடி வந்தனர். காலையில் மருதப் பண்ணும் மாலையில் செவ்வழிப்பண்ணும் பாடுவாராம்!

இசைத் தமிழின் இலட்சண விளக்கமாகச், சிகண்டியார் என்பவர் இசை நுணுக்கம் என்ற நூலையும், நாடகத் தமிழுக்குச் செயிற்றியம் என்ற நூலைச் செயிற்றியனார் என்பவரும் இயற்றினர்.

ஷட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற வடமொழிப் பெயர்களுடன் உள்ள சுரம் ஏழும், ஏழிசை என்ற பொதுப் பெயருடன் முறையே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற தமிழ்ப் பெயருடன் முன்னம் விளங்கின.

தமிழர் ஒரு சுரத்தைப் பதினாறு ஆகப் பகுத்துணரும் பக்குவமும் பெற்றிருந்தனர்.

ராகம் என்று கூறப்படுவது, தமிழரால் பண் என்று குறிக்கப்பட்டு வந்தது.

ராக லட்சணங்கள் பொருந்திய தமிழ்ப்பாடல் இல்லையென்று கூறுவோருக்குக் கூறுகிறோம். தமிழரின் பண்கள் எண்ணற்று இருந்தன. வடமொழியில் கர கரப் பிரியா எனக் குறிப்பிடப்படுவதே படுமலைப் பாலைப் பண் என்றும்; கல்யாணி எனும் ராகம், அரும் பாலைப் பண் என்றும் முன்னாளில் குறிப்பிடப்பட்டது. அரிகாம்போதிக்குத் தமிழர் அளித்த பெயர், கோடிப் பாலைப் பண்; பைரவிக்கு விளரிப் பாலைப்பண்; தோடிக்குச் செவ்வழிப் பாலைப்பண் என இங்ஙனம் ராக லட்சணங்கள் எவ்வளவோ தமிழில் இருந்தன; மறைந்தன! ஆரியத்தால் மங்கின: அழிந்தனவும் உண்டு.