பக்கம்:எனது நண்பர்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  119

தமிழர் நாடு

1941 இறுதியில் அன்பர் அண்ணாத்துரை அவர்கள் “திராவிட நாடு” என ஒரு இதழைத் தொடங்கப் போவதாக எழுதியிருந்தார். நான் அதைத் “தமிழர் நாடு” எனத் தொடங்கும்படி எழுதியிருந்தேன். பல முன்னேற்பாடுகள் நடைபெற்று விட்டதனால், இனிமேல் எதுவும் செய்வதற்கில்லையென அறிவிக்கப் பெற்றேன்.

இளைஞர் மாநாடு

1942 தொடக்கத்தில் சென்னை மாகாண ஜஸ்டிஸ் மாநாடு ஒன்றை சென்னையில் கூட்டுவதற்குப் பெரு முயற்சிகள் நடைபெற்றன. அம்மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் அன்பர் அண்ணாத்துரையே ஆவர். என்னைத் தலைமை வகிக்கும்படி மாநாட்டு அமைச்சர் எழுதியிருந்தார். தகுந்த காரணங்களைக் காட்டி மறுத்து விட்டேன். அக்கடிதத்தை அன்பர் அண்ணாத்துரை பார்வையிட்டு ஒரு வற்புறுத்தல் கடிதம் எழுதியிருந்தார். அது, இது :—

“அன்புள்ள தோழருக்கு,

வணக்கம்! தங்களை நேரில் காணவேண்டும் என ஆவல் எனக்கு அதிகம். என்றாலும், இது சமயம் வேலை மிகுதியினால் அங்குவர இயலவில்லை, என வருந்துகிறேன். தாங்கள் டில்லியிலிருந்து திரும்பியதும் தங்களுடன் ஒரு நாள் முழுதும் கலந்து பேசவேண்டும்.

சென்னை மாநாட்டிற்குத் தாங்களே தலைமை வகிக்கவேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறேன். மறுக்க வேண்டாம். திராவிட நாட்டுப்பிரிவினை பற்றிப் திருவாரூரில் தீர்மானம் நிறைவேறியிருப்பதால் அது குறித்து எதிர்ப்பது முறையாகாது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். தங்களுக்கு அது விருப்பமில்லாவிடில், தமிழ் நாடு தனி மாகாணம் ஆவதின் அவசியம் பற்றித் தலைமை உரையில் விளக்குங்கள். மற்றப்படி கட்சி-