52 □ எனது நண்பர்கள்
சுமார் 50 ஆண்டுகட்கு முன்பு நான் செயலாளனாக இருந்து நடத்திய திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்திற்கு வந்து அடிக்கடி சொற்பொழிவு நிகழ்த்தி மகிழ்வித்த பேரறிஞர். என்னிடம் நீங்காத அன்பு கொண்டவர்.
இவரது சிவந்த மேனியும், மெலிந்த உடலும், எளிமையான உடையும், அமைதியான தோற்றமும், கூர்மையான பார்வையும், இனிமையான சொல்லும் இன்றும் என் கண் முன்னே நிற்கின்றன.
இவரது அருஞ்செயல்களையும், பெருந்தொண்டுகளையும் பாராட்டி மகிழ, திரு எஸ். கந்தசாமி அவர்கள் தலைமையில் கோவைப் பெருமக்கள் ஒரு நினைவுக் குழு அமைத்து, மலர் ஒன்றையும் வெளியிட்டு விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இன்னும் நாம் என்னதான் செய்தாலும் திரு. முதலியார் அவர்கள் செய்த தொண்டுக்கு எதுவும் ஈடாகாது. அவருக்கு நன்றியும் வணக்கமும் செலுத்துவது ஒன்றே நாம் செய்ய வேண்டிய கடமையாக இருக்கும்.
அவர் உயிரோடு வாழ்ந்த காலத்தில், தமிழகம் முழுவதுமுள்ள புலவர் பெருமக்கள் அனைவரும் அவரை ஒரு பெரும் புலவராக மதித்து வணங்கி மகிழ்ந்த காட்சி, ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.
அவரது இழப்பு தமிழுக்கும் சைவத்திற்கும் ஒரு பேரிழப்பாகும். தமிழும், தமிழரும், தமிழகமும் உள்ள வரை அவரது புகழ் நீங்காது நிலைத்து நிற்கும்.
வாழட்டும் அவரது புகழ்!
வளரட்டும் அவரது தொண்டு!