பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122


மனோஹரன் நாடகத்தில்

திருப்பாதிரிப்புலியூரில் ஒருநாள் மனோஹரன் நாடகம் நடந்து கொண்டிருந்தது. மனோஹரனில் முக்கியமான காட்சி; சங்கிலிகளால் கட்டப்பெற்று ஆவேசங் கொண்ட நிலையில் நிற்கிறான் மனோகரன். “என் மைந்தனா நீ?” என்கிறார் தந்தை புருஷோத்தமர். உடனே மனோஹரன், “என்ன சொன்னீர்?” என்று ஆக்ரோஷத்தோடு சங்கிலிகளை அறுத்துக் கொண்டு எதிரே நிற்கும் காவலனின் வாளை உருவி, தந்தையைக்கொல்லப் பாய்கிறான்.

புருஷோத்தமன் பேச்சு முடிந்தது. மனோஹரனாக நின்ற நான். “ஆ, என்னசொன்னீர்?” என்று கர்ஜித்தபடி சங்கிவிகளைப் பிணைத்திருந்த சுருக்குக் கயிற்றை இழுத்தெறிந்து விட்டு அதாவது சங்கிலிகளை அறுத்தெறிந்து விட்டு, எதிரே நின்ற காவலனின் உடைவாளை உருவிக்கொண்டு, சிம்மாதனத்தில் வசந்த சேனையுடன் வீற்றிருந்த புருஷோத்தமரை நோக்கிப்பாய்ந்தேன்.

பரிதாப நிலை

சபையில் ஒரே சிரிப்பொலி, எவ்வளவு ரசனைக் குறைவான சபையாயிருந்தாலும் சிரிக்கக் கூடிய கட்டமல்ல அது. எதிரே சிம்மாசனத்தில் வீற்றிருந்த புருஷோத்தமர் உதடுகளிலும் புன்னகை தவழ்ந்தது.வசந்தசேனை வேடத்திலிருந்த சின்னண்ணாவும் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். ஒரு விடிை எனகொன்றும் புரியவில்லை ...பிறகு, உண்மையை உணர்ந்தேன். என் உயிரே போய்விடும்போல் இருந்தது வீர தீர மனோஹரனுடைய அப்போதைய நிலைமை மிகப் பரிதாபகரமானது... . . ... விஷயம் என்ன தெரியுமா? காவலனிட மிருந்து நான் உடைவாளை உருவியபோது, என் கையோடு வந்தது, கத்தியின் கைப்பிடி மட்டும்தான். கத்தி, பிடியிலிருந்து விடுபட்டு வெளியே வராமல் காவலனின் உறைக்குள்ளேயே தங்கி விட்டது. எனக்கிருந்த உணர்ச்சி வேகத்தில் நான் இதைக் கவனிக்கவில்லை. வெறும் கைப்பிடியோடு நின்ற மனோகரனின் நிலையைக் கண்டு யார்தான் சிரிக்கமாட்டார்கள்?

எனது நடிக நண்பர்களுக்கு இதைப் போன்ற பரிதாப நிலை ஏற்படாதிருக்குமாக! எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்காகவே இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டேன்.