பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பேய் வீடு

சிவகங்கை, ஜமீனுக்குச் சொந்தமான நகரம். ஆங்கி லேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த ராணி வேலுநாச்சியாரும், மருது பாண்டியர்களும் வாழ்ந்த பிரதேசம். அந்த ஊரில் கம்பெனிக்கு வீடே கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள். கடைசியாகக் கொட்டகைக்கு அருகிலேயே ஒரு பெரிய வீடு கிடைத்தது. அது, சிவகங்கை அரண்மனைக்குச் சொந்தமான வீடு. அந்த வீடு, பல ஆண்டுகளாகப் பூட்டிக் கிடந்ததாகவும், அதில் யாருமே குடியிருப்பதில்லையென்றும் பேசிக் கொண்டார்கள். அந்த வீட்டுக்குப் பக்கத்திலேயே மற்றொரு பெரிய வீடு பாழ டைந்து கிடந்தது. அதுவும் அரண்மனையைச் சேர்ந்த வீடுதான்.

கம்பெனியார் குடியிருந்த வீட்டில், ஏற்கனவே பேய்கள் குடியிருப்பதாகப் பலரும் சொல்விக் கொண்டார்கள். அந்த வீட்டில் இருந்த அரண்மனையைச் சேர்ந்த பல குடும்பங்கள் நசித்துப் போனதாகவும் கதை கதையாகப் பேசிக்கொண்டார்கள்

இந்தக் கதைகளை உறுதிப்படுத்தும் முறையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு நாள் சுலோசன சதி நாடகத்தில் ஆதிசேடன் வேடம் புனைந்திருந்த பாட்டா இராமகிருஷ்ணன் தன் வேலை முடிந்து விட்டதால் சுவாமிகளிடம் சொல்லிவிட்டுக் கம்பெனி வீட்டுக்குப் போயிருக்கிறார். சமையல் அப்பாஜிராவிடம் சாப்பாடு போடச் சொல்லிவிட்டுப் புழக்கடைப் பக்கம் போனவர், எதிரே யாரோ ஒருவர் நிற்பதைப் பார்த்து, “யாரையா?” என்று கேட்டிருக்கிறார். உடனே திடீரென்று அந்த உருவத்தின் கண்களிலிருந்து நெருப்புப் பொறிகள் வீசவும், குள்ளமாக இருந்த உருவம் பெரிய பனைமரம் அளவுக்கு வளர்ந்து தலைவிரிகோலத் துடன் பயங்கரமாக நின்றதாம். இதைப் பார்த்த இராம கிருஷ்ணன், ‘ஐயோ’ என்று கூச்சலிட்டலறி அப்படியே சாய்ந்து விட்டாராம்.