பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


கட்டபொம்மன் சீமை

முடிமன்னுக்குச் சுமார் மூன்று அல்லது நான்கு மைல் தொலைவில் பாஞ்சாலங்குறிச்சி இருப்பதாகப் பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். அந்த மண்ணாக்கே ஒரு தனி வீரமென்றும், முயல் நாயைத் துரத்தும், பாம்பு கீரியைத் துரத்தும் என்றெல்லாம் கதை கதையாகப் பேசுவார்கள். அந்தப் பாஞ்சாலங்குறிச்சி மண்ணை யாரும் எடுத்துப் போகாதபடி வெள்ளைக்காரர்கள் காவல் போட்டிருப்பதாகக் கூடப் பேசிக் கொண்டார்கள்.

எங்களுக்கெல்லாம் அந்த வீரம் செறிந்த பாஞ்சாலங்குறிச்சியைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. என்ன செய்வது? யாராவது அழைத்துப் போனால்தானே? அன்று அந்தப் பிரதேசத்தின் பெருமைக்குரிய வரலாறு எங்களுக்குத்தெரியாது. இன்று அதைப்பற்றி எண்ணாம் போதெல்லாம் எனக்கு உள்ளத்தில் ஒரு தனி மகிழ்ச்சியுண்டாகிறது. வீர சிதம்பரனார் பிறந்த ஒட்டப்பிடாரத்திற்கு அருகில் ஐம்பத்தொரு ஆண்டுகளுக்கு முன் நாங்கள் நாடகம் நடித்திருக்கிறோம் வீரபாண்டிய கட்டபொம்மன் சீமையில் எங்கள் கலைப்பணி நடந்திருக்கிறது! ஆஹா, எண்ணாம் போதே உள்ளம் பூரிக்கிறது!


ஒற்றையடிப் பாதை

இந்த இடத்தில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியைக் குறிப்பிட வேண்டியது என் கடமையெனக் கருதுகிறேன். போலிநாய்க்னுாரில் நாடகம். முடிமன்னிலிருந்து நாங்கள் எல்லோரும் நடந்தே செல்ல வேண்டும். சப்பாத்திக் கள்ளிகளும், முட்புதர்களும் நிறைந்த கரடுமுரடான ஒற்றையடிப் பாதை. இரவு ஏழு மணி சுமாருக்கு முடிமன்னிலிருந்து புறப்படுவோம். மங்கலான வெளிச்சமுள்ள ஓர் அரிக்கன் விளக்கைப் பிடித்துக் கொண்டு முன்னால் ஒருவர் போவார். நாங்கள் எல்லோரும் அவரை நெருங்கியபடி நடந்து செல்வோம். நாடகம் முடிந்து திரும்பும்போது எங்களில் சிலருக்குக் குலை நடுக்க மெடுக்கும் சில சமயங்களில் அருகில் ‘புஸ்’ ஸென்று சத்தம் கேட்கும். புதர்களுக்கிடையே ஏதோ ஒடுவது போலத் தோன்றும். பக்கத்தில் வரும் பெரியவர்களைக் கட்டிக் கொள்ளுவோம். சில நேரங்களில் சமையல் அப்பாஜிராவ் என்னைத் தூக்கிக் கொள்வார்.