பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

என் சரித்திரம்

உத்தமதானபுரம் வந்தது

அப்பால் அவ்வூரிலிருந்து புறப்பட்டுப் பெரிய திருக்குன்றம் வந்து சிலநாள் தங்கிப் பிறகு உத்தமதானபுரம் சென்றோம். உத்தமதானபுரத்திலிருந்து அப்பால் மாயூரம் செல்ல வேண்டியதுதான். இந்த நிலையில் அதுகாறும் என்னைப் பிரிந்திராத என் பெற்றோர்கள் நான் தனியே மாயூரத்தில் இருக்கவேண்டுமே என்பது பற்றிக் கவலைகொள்ளத் தொடங்கினர்.

“நம்முடைய காலநிலை இப்படி இருக்கிறது. குழந்தையைவிட்டு நான் எப்படித் தனியே இருப்பேன்! இவனுக்கு வேண்டிய ஆகாரத்தை அங்கே பிரியத்துடன் யார் செய்துபோடுவார்கள்? இவனுக்குத் தன் கையாலேயே எண்ணெய் தேய்த்துக்கொள்ளக்கூடத் தெரியாதே!” என்று என் தாயார் வருந்தினார்.

“என்ன செய்வது! நம்முடைய கால வித்தியாசம் இப்படி இருக்கிறது. இதுவரையிலும் அவன் படிப்பையே முக்கியமாக எண்ணி எங்கெங்கே போனால் அவன் படிப்பும் நம் காலக்ஷேபமும் நடைபெறுமோ அங்கங்கெல்லாம் போய் இருந்தோம். இப்போதோ மாயூரத்தில் நாம் போய் இருப்பது சாத்தியமன்றே! கிராமங்களில் உள்ள ஜனங்களைப் போல நகரவாசிகள் நம்மை ஆதரிக்க மாட்டார்களே! தவிர, அரியிலூரைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருப்பவர்கள் என்னிடம் அபிமானமுள்ளவர்கள். மாயூரத்தில் அப்படி யார் இருக்கிறார்கள்? இவனுக்கே ஆகாரம் முதலிய சௌகரியங்கள் கிடைக்குமோவென்று சந்தேகப்படுகிறேன். அவற்றிற்கு வேண்டிய ஏற்பாடு செய்யப் பணம் வேண்டும். பணத்திற்கு என்ன செய்வது!” என்று என் தந்தையார் வருந்தினார்.

மந்திரோபதேசம்

“ஈசுவர சகாயம் இருந்தால் எல்லாம் கை கூடும” என்ற கொள்கையையுடைவர் என் தந்தையார். சிவபூஜை, மந்திர ஜபம் முதலியவைகளில் அவருக்கு நம்பிக்கை அதிகம். எனக்குச் சில மந்திரங்களைத் தக்கவர்களைக்கொண்டு உபதேசம் செய்விக்கவேண்டுமென்று அவர் கருதினார்.

உத்தமதானபுரத்திற்கு வடக்கிலுள்ள தியாகசமுத்திரமென்னும் ஊரில் நீலகண்டைய ரென்பவர் கிராமக் கணக்கு வேலைபார்த்து வந்தார். அவருக்கும் என் தந்தையாருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்தது. அவர் சங்கீதப் பயிற்சி உடையவர்.