பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிதம்பரம் பிள்ளையின் கலியாணம்

313

திருவாவடுதுறை மடத்திற்குத் திருநெல்வேலி ஜில்லாவில் பல கிராமங்கள் இருக்கின்றன. கல்லிடைக்குறிச்சியைச் சார்ந்தும் பல உள்ளன. அவற்றைக் கவனிப்பதற்காக அவர் அங்கே இருக்கிறார். கல்லிடைக்குறிச்சியிலும் திருவாவடுதுறையைப் போலவே மடமும் அதற்கு அங்கமாகிய கோயில் முதலிய இடங்களும் பரிவாரங்களும் உண்டு. ஸந்நிதானம் சின்னப் பட்டத்தில் இருந்தபோது சில வருஷங்கள் அங்கே எழுந்தருளி இருந்தது இந்த ஆதீனத்திற்கு இராசதானி நகரம் போன்றது திருவாவடுதுறை. இளவரசர் இருத்தற்குரிய நகரம்போல விளங்குவது கல்லிடைக்குறிச்சி, சின்னப் பட்டத்திலுள்ளவர்கள் கல்லிடைக்குறிச்சியிலிருப்பது வழக்கம். அவர்களை இளவரசென்றும் சொல்வதுண்டு.”

“திருவாவடுதுறை ஆதீனம் தமிழ்நாடு முழுவதையும் ஆட்சிபுரிவது போலல்லவா இருக்கிறது?” என்று நான் ஆச்சரியத்தோடு வினவினேன்.

“மடத்தின் பெருமை உமக்கு வர வரத்தான் தெரியும். சிஷ்யர்கள் எங்கெங்கே இருக்கிறார்களோ அங்கெல்லாம் இவ்வாதீனத்தின் சம்பந்தம் இருக்கும். காசி முதல் கன்னியாகுமரி வரையில் முக்கியமான சிவஸ்தலங்களிலும் ஆதீனத்தின் சம்பந்தம் உண்டு” என்று ஆசிரியர் உரைத்தார்.

கடிதங்கள் எழுதப் பெற்ற கனவான்களிற் பலர் சந்தோஷத்தோடு விடை எழுதினர். நமச்சிவாய தேசிகரும் எழுதியிருந்தார்.

சிதம்பரம் பிள்ளையின் விவாகம் குறிப்பிட்ட முகூர்த்தத்தில் மிகவும் சிறப்பாக நடந்தது. அதற்குப் பல கனவான்கள் வந்து விசாரித்து மகிழ்ந்து சென்றனர். அக்கனவான்களை அறிந்துகொண்டது எனக்குப் பெரிய லாபமாயிற்று.

கலியாண நிகழ்ச்சிகள்

கலியாணத்தில், திருவாவடுதுறையிலிருந்து வந்த காரியஸ்தர்கள் தங்கள் தங்களால் செய்யக்கூடிய காரியங்களைச் செய்தார்கள். என்னுடைய சகபாடியாகிய சவேரிநாத பிள்ளை பம்பரமாகச் சுற்றிப் பல காரியங்களை நிறைவேற்றினார். என்னால் முடிந்தவற்றை நான் கவனித்தேன்.

முகூர்த்த தினத்தின் மாலையில் பாட்டுக் கச்சேரி, விகடக் கச்சேரி, பரத நாட்டியம், வாத்தியக் கச்சேரி எல்லாம் நடந்தன. ஒரு பெரிய ஜமீன்தார் வீட்டு விவாகம்போலவே எல்லாவிதமான