பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருப்பெருந்துறைப் புராணம்

321

செட்டியாரும் மகா வைத்தியநாதையரும் அவர் தமையனாராகிய இராமசாமி ஐயரும் மடத்திற்கு வந்திருந்தனர்.

நான் பெரியபுராணம் படிக்கும்போது அபஸ்வரம் இல்லாமல் படிப்பதைக் கண்டு மகா வைத்தியநாதையர் சந்தோஷமடைந்தார். சில நாட்கள் அவர் திருவாவடுதுறையில் தங்கினமையின், அவரோடு பழகி அவருடைய குணங்களை அறிந்துகொள்ள அனுகூலமாயிற்று. அவரோடு பழகப் பழக அவருடைய சிவபக்தியும் ஒழுக்கமும் வரையறையான பழக்கங்களும் தூய்மையும் என் மனத்தைக் கவர்ந்தன. சுப்பிரமணிய தேசிகரால் தாம் முன்னுக்கு வந்ததை எண்ணி அவர் விநயமாக நடந்துகொண்டதைப் பார்த்தபோது அவரது நன்றியறிவு எவ்வளவு சிறப்பானதென்பதை நான் உணர்ந்தேன்.

அவர் என்னிடம் அன்பு பாராட்டி எனக்கு எவ்வாறு சங்கீதப் பயிற்சி ஏற்பட்டது என்று கேட்டார். நான் எங்கள் குடும்ப வரலாற்றையும் தந்தையாரது சங்கீதத் திறமையையும் எடுத்துச் சொன்னேன். எனக்குத் தெரிந்த கனம் கிருஷ்ணையர் கீர்த்தனங்களையும் பாடிக்காட்டினேன். அவர் கேட்டு மகிழ்ந்தார்.

வைசூரி

ஆங்கீரஸ வருஷம் கார்த்திகை மாதம் (1872 நவம்பர்) முதல் பெரியபுராணப் பாடம் நிகழ்ந்து வந்தது. கண்ணப்ப நாயனார் புராணம் நடைபெற்றபோது எனக்குத் திடீரென்று கடுமையான ஜ்வரம் வந்துவிட்டது. உடம்பில் எங்கும் முத்துக்கள் உண்டாயின. எல்லோரும் பெரியம்மை வார்த்திருப்பதாகச் சொன்னார்கள். அதனால் பெரியபுராணப் பாடம் கேட்கவோ மற்றக் காரியங்களைச் செய்யவோ ஒன்றும் இயலவில்லை. சத்திரத்தின் ரேழி (இடைகழி)யில் படுத்தபடியே இருந்தேன். பிள்ளையவர்கள் சில சமயங்களில் வந்து அருகில் உட்கார்ந்து, “உமக்கு இப்படி அசௌக்கியம் வந்துவிட்டதே!” என்று வருந்துவார். என் கண் இமைகளின் மேலும் கொப்புளங்கள் எழுந்தமையால் கண்களைத் திறக்க முடியவில்லை. பிள்ளையவர்கள் வரும்போது படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொள்வேன். துக்கம் பொங்கிவரும். கண்ணையோ திறக்க முடியாது. கண்ணீர் வழிய வழிய நான் என் வருத்தத்தைத் தெரிவித்தேன். “என் பாட்டனார் ஊராகிய சூரியமூலைக்குப் போய்த் தேகசௌக்கியம் உண்டான பிறகு வருகிறேன்’ என்றேன். அவ்வாறே செய்யலாம் என்று கூறி என்னை அனுப்புவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்யலானார்கள்.

என்-21