பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358

என் சரித்திரம்

திருமுகம் ஒன்று வந்தது. அன்று ஆசிரியர் என்னிடம் வந்து, “ஸந்நிதானம் கட்டளைச் சாமிக்குத் திருமுகம் அனுப்பியிருக்கிறது. அரங்கேற்றத்தைப்பற்றி விசாரித்திருக்கிறது. ‘சாமிநாதையர் படிப்பது உமக்குத் திருப்தியாக இருக்குமே’ என்று எழுதியிருக்கிறது. உமக்கு ஜ்வரமென்று தெரிந்தால் ஸந்நிதானம் மிக்க வருத்தத்தை அடையும்” என்று சொல்லி இரங்கினார்.

பிள்ளையவர்களிடம் வந்த பிறகு இது மூன்றாவது முறையாக நேர்ந்த அசௌக்கியம். முன்பு அசௌக்கியம் நேர்ந்த காலங்களைக் காட்டிலும் இப்பொழுது நேர்ந்த காலம் மிகவும் முக்கியமானது. அரங்கேற்றத் திருவிழாவிற் கலந்துகொண்டு இன்புறும் பாக்கியத்தை அது தடைசெய்தது. வரவர அந்த அசௌக்கியம் அதிகமாயிற்று. ஜ்வர மிகுதியினால் சில சமயங்களில் நான் ஞாபகமிழந்து மயக்கமுற்றுக் கிடந்தேன். ஆசிரியருக்கும் பிறருக்கும் கவலை அதிகமாயிற்று. இனி அங்கே இருந்தால் எல்லோருக்கும் அசௌகரியமாயிருக்குமென்பதை உணர்ந்த நான் ஆசிரியரிடம், “என் ஊருக்குப் போய் மருந்து சாப்பிட்டுக் குணமானவுடன் திரும்பி வருகிறேன்” என்று சொன்னேன்.

அதைக் கேட்டவுடன் அவருக்குத் துக்கம் பொங்கியது. “பரமசிவம் நம்மை மிகவும் சோதனை செய்கிறார் நீர் சௌக்கியமாக இருக்கும்போது இங்கே இருந்து உதவி செய்கிறீர். இப்போது அசௌக்கியம் வந்ததென்று ஊருக்கு அனுப்புகிறோம். அசௌக்கியத்தை மாற்றுவதற்கு நம்மால் முடியவில்லை. உம்முடைய தாய், தந்தையர் என்ன நினைப்பார்களோ!” என்றார்.

“அவர்கள் ஒன்றும் நினைக்க மாட்டார்கள். ஐயா அவர்களின் பேரன்பை அவர்கள் நன்றாக அறிந்தவர்கள்” என்று சொன்னேன். ஆசிரியர் என் யோசனையை அங்கீகரித்தனர்.

உத்தமதானபுரத்திற்குச் சென்றது

தக்க ஏற்பாடுகள்செய்து என்னை உத்தமதானபுரத்திற்கு அனுப்பினார். என்னுடன் துணையாக வெண்பாப்புலி வேலுசாமிப் பிள்ளை என்னும் மாணாக்கரை வரச்செய்தார். சுப்பிரமணியத் தம்பிரானிடம் தெரிவித்து வழிச்செலவுக்காக எனக்குப் பத்து ரூபாய் அளிக்கச் செய்தார். நான் பிரிவதற்கு மனமில்லாமலே ஆவுடையார் கோயிலைவிட்டு உத்தமதானபுரம் வந்து சேர்ந்தேன்.

என் தாய் தந்தையார் உத்தமதானபுரத்தில்தான் இருந்தனர். கோபுராஜபுரத்திலிருந்த காத்தான் என்ற சிறந்த வைத்தியன் என்