பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372

என் சரித்திரம்

என்னோடு பேசுவதற்கு முன்பே அவரை, “பிள்ளையவர்கள் எங்கே?” என்று கேட்டேன். “அவர்கள் அம்பருக்குப் போயிருக்கிறார்கள்” என்று அவர் சொன்னார்.

பத்து மாதங்களுக்கு மேலாக நான் பிரிந்திருந்தமையால் என்னைக் கண்டவர்களெல்லாம் என் க்ஷேம சமாசாரத்தைப் பற்றி விசாரித்தார்கள். குமாரசாமித் தம்பிரானைக் கண்டேன். அவர் பிள்ளையவர்கள் திருப்பெருந்துறையில் இருந்தபோது இயற்றிய சேக்கிழார் பிள்ளைத் தமிழைப் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். திருப்பெருந்துறையில் அரங்கேற்றம் நிறைவேறியவுடன் ஆசிரியர் புதுக்கோட்டை முதலிய பல ஊர்களுக்குச் சென்றனரென்றும் அப்பால் திருவாவடுதுறைக்கு வந்தாரென்றும் பவ வருஷம் பங்குனி மாதம் அவருக்கு ஷஷ்டியப்தபூர்த்தி மிகச் சிறப்பாக நடைபெற்றதென்றும் சொன்னார். ஒரு வாரத்திற்கு முன்புதான் அம்பர்ப் புராணத்தை அரங்கேற்றும்பொருட்டு ஆசிரியர் அத்தலத்திற்குச் சென்றனரென்றும் அறிந்தேன். அறிந்தது முதல் எனக்குத் திருவாவடுதுறையில் இருப்புக்கொள்ளவில்லை. அம்பரை நோக்கிப் புறப்பட்டேன்.

அம்பரை அடைந்தது

காலையிற் புறப்பட்டுப் பிற்பகல் ஒரு மணி அளவுக்கு அம்பரை அடைந்தேன். வழியில் வேலுப்பிள்ளை என்ற கனவான் எதிர்ப்பட்டார். அம்பர்ப் புராணம் செய்வித்தவர் அவரே. அவரிடம் பிள்ளையவர்களைப் பற்றி விசாரித்தேன். பிள்ளையவர்கள் சொர்க்கபுர மடத்தில் தங்கி இருப்பதாக அவர் சொல்லவே, நான் அவ்விடம் போனேன். அங்கே என் ஆசிரியர் மத்தியான்ன போஜனம் செய்த பிறகு வழக்கம்போல் நித்திரை செய்திருந்தார். காலை முதல் ஆகாரம் இல்லாமையாலும் நெடுந்தூரம் நடந்து வந்தமையாலும் எனக்கு மிக்கபசியும் சோர்வும் இருந்தன. ஆனால் ஆசிரியரைக் கண்டு பேச வேண்டுமென்ற பசி அவற்றை மீறி நின்றது. என்னை வழியில் சந்தித்த வேலுப்பிள்ளை என் தோற்றத்திலிருந்து நான் ஆகாரம் செய்யவில்லை என்று அறிந்து உடனே தம் காரியஸ்தர் ஒருவரிடம் சொல்லி நான் ஆகாரம் செய்வதற்குரிய ஏற்பாட்டைச் செய்துவிட்டார். அக்காரியஸ்தர் என்னிடம் வந்து, போஜனம் செய்துகொண்டு பிறகு பிள்ளையவர்களோடு பேசலாமென்று சொன்னார். எனக்கு ஆகாரத்தில புத்தி செல்லவில்லை. பிள்ளையவர்களோடு ஒரு வார்த்தையாவது பேசிவிட்டுத்தான் சாப்பிட வேண்டுமென்ற உறுதியுடன் இருந்தேன்.