பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

406

என் சரித்திரம்

சித்தாந்த நூல்கள்

சைவசித்தாந்த சாஸ்திரங்களைக் கேட்க விரும்பிய என்னை முதலில் சிவப்பிரகாசக் கட்டளையையும் திருவாலவாய்க் கட்டளையையும் படிக்கச் சொன்னார். பிறகு சிவஞான போதச் சிற்றுரையையும் அப்பால் சிவஞான சித்தியாருரை முதலியவற்றையும் பாடம் சொன்னார்.

அத்தியாயம்—66

மடத்திற்கு வருவோர்

மாணாக்க நிலையிலிருந்து நாங்கள் கற்று வந்த அக்காலத்தில் தேசிகர் கட்டளைப்படி ஆசிரிய நிலையில் இருந்து மடத்தில் உள்ள குட்டித் தம்பிரான்களுக்கும் மற்றவர்களுக்கும் தமிழ் நூல்களைக் கற்பித்தும் வந்தோம்.

என்னிடம் பாடம் கேட்டோர்

என்னிடம் அக்காலத்திற் படித்த தம்பிரான்கள் சுந்தரலிங்கத் தம்பிரான். விசுவலிங்கத் தம்பிரான். சொக்கலிங்கத் தம்பிரான். பொன்னம்பலத் தம்பிரான். மகாலிங்கத் தம்பிரான், வானம்பாடி சுப்பிரமணியத் தம்பிரான். சிவக்கொழுந்துத் தம்பிரான் முதலியோர்.

வெள்ளை வேஷ்டிக்காரர்களுள் பேரளம் இராம கிருஷ்ண பிள்ளை, சிவகிரிச்சண்முகத் தேவர். ஏம்பல் அருணாசலப் புலவர், சந்திரசேகரம் பிள்ளை, ஏழாயிரம் பண்ணை தாமோதரம் பிள்ளை, கோயிலூர்ப் பரதேசி ஒருவர், நெளிவண்ணம் சாமுப் பிள்ளை, திருவாவடுதுறைப் பொன்னுசாமி செட்டியார், திருவாவடுதுறைச் சண்முகம்பிள்ளை என்போர் முக்கியமானவர்கள். இவர்களில் இரண்டிரண்டு பேர்களாகப் பிரித்து ஒவ்வொரு வகைக்கும் அரை மணிமுதல் ஒருமணி வரையில் பாடம் சொல்வேன். அக்காலத்தில் என்னிடம் படித்தவர்களில் இப்போது இருப்பவர் திருவாவடுதுறையில் முக்கிய காரியஸ்தராக இருந்து ஓய்வு பெற்று அவ்வூரில் தெற்கு வீதியில் இருக்கும் சிரஞ்சீவி சண்முகம் பிள்ளை என்பவர் ஒருவரே. இவர்களைத் தவிர இடையிடையே மடத்துக்கு வந்து பாடம் கேட்டோர் சிலர்.