பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

446

என் சரித்திரம்

பிரதிநிதியை அனுப்பி அவரை எதிர்கொண்டழைக்கச் செய்து வரவேற்று உட்காரச் செய்து சம்பாஷணை செய்யத் தொடங்கினர்.

மதிநலம் படைத்த மணி ஐயரும், சிறந்த ரஸிகராகிய சுப்பிரமணிய தேசிகரும் பேசும்போது அப்பேச்சில் இனிமை பொங்கித் ததும்பியது. அங்கே கூடியிருந்தவர்கள் விழித்த கண் மூடாமல் காதை நெரித்துக்கொண்டு அவர்களைக் கண்டும், அவர்கள் பேச்சைக் கேட்டும் மகிழ்ந்தனர். மணி ஐயர் விஷயங்களைத் துணிவாகவும். வெடுக்கு வெடுக்கென்றும் எடுத்துச் சொன்னபோது அவருடைய தைரியமும் சத்தியத்தில் அவருக்கிருந்த நம்பிக்கையும் புலனாயின. தேசிகர் மிகவும் நயமான மெல்லிய இனிய சொற்களால் அப்பெரியாரைப் பாராட்டினார். ஸம்ஸ்கிருத சுலோகங்களையும், தமிழ்ப் பாடல்களையும் சொல்லிச் சந்தோஷமுறச் செய்தார். மணி ஐயர் இலக்கியச் சுவையை நுகரும் இயல்பினராதலால் அவற்றைக் கேட்டு அனுபவித்தார்.

வேதநாயகம் பிள்ளை பாடல்

அப்பெருங் கூட்டத்தில் மதுரை மாநகரத்திற்கு உயிராக விளங்கிய மணி ஐயருடைய முன்னிலையில் ஏதேனும் பாடல் சொல்லும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். அப்போது அருகிலிருந்த வேணுவனலிங்கத் தம்பிரான் ஒரு சந்தர்ப்பத்தை உண்டாக்கினார். பேச்சுக்கிடையில், “மாயூரம் முன்ஸீப் வேதநாயகம் பிள்ளையவர்கள் மகா ஸந்நிதானத்தின் விஷயமாகப் பல பாடல்களைப் பாடி இருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார். மணி ஐயரும், “எங்கே, அந்தப் பாடல்களைக் கேட்கலாமே” என்று சொல்லவே, நான் என் உத்தியோகத்தைப் பார்க்கத் தொடங்கினேன். வேதநாயகம் பிள்ளை கூறிய பல பாடல்களைச் சொல்லி அவற்றிற்குரிய சந்தர்ப்பத்தையும் பொருளையும் எடுத்துரைத்தேன். “இந்த மாதிரியான மகாசபையை வேறு எங்கே பார்க்கப் போகிறோம்” என்ற நினைவினால் எனக்கு வர வர ஊக்கம் அதிகமாயிற்று.

“தடையில் கொடைச்சுப் பிரமணி
     யையநிற் சார்ந்தவர்கொள்
கொடையை அவர்சொல வேண்டுங்
    கொலோவவர் குட்சிசொலும்
இடைசொலுங் கண்டமுங் காதுஞ்
    சொலுமிறு மாப்புடைய
நடைசொலுங் கையிற் குடைசொலும்
    வேறென்ன நான்சொல்வதே”