பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோதனையில்‌ வெற்றி

495

முறைக்கு இயைவுற’ என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கிறார்” என்று ஸ்ரீநிவாசையர் சந்தோஷமுற்றார்.

யாவரும் தங்கள் தங்கள் திருப்தியைத் தெரிவித்துக் கொண்டனர். “சாயங்காலம் கோபாலராவ் அவர்களைப் பார்க்கவேண்டும். இங்கேயே தங்கியிருங்கள். நான் வந்து அழைத்துப் போகிறேன்” என்று சொல்லிவிட்டுச் செட்டியார் தம் வீடு சென்றார். மற்றவர்களும் தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.

அன்று சேஷையர் வீட்டிலேயே போஜனம் செய்து கொண்டேன். பிற்பகல் ஐந்து மணிக்குச் செட்டியார் என்னைக் கோபாலராவ் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். புஸ்தகக் கட்டுகளும் எங்களுடன் வந்தன. அங்கே சேஷையர், ஹனுமந்த ராவ், ஸ்ரீநிவாசையர் முதலிய ஆசிரியர்களும் வந்தார்கள்.

கோபால ராவின் காட்சி

கோபால ராவ் அப்போது மெத்தையில் இருந்தார். எப்போதும் புஸ்தகங்களுடன் உறவாடும் அப்பெரியார் தனியே இருந்து படித்து இன்புற்றுக்கொண்டே இருப்பவர். அவரை அணுகுவதற்கு யாவரும் அஞ்சுவார்கள்.

நாங்கள் கீழே உள்ள ஹாலில் இருந்தோம். எல்லோரும் வந்த விஷயத்தை எப்படித் தெரிவிப்பது என்று யோசித்திருக்கும்போது ஹனுமந்த ராவ் துணிவுடன் மேலே சென்று விஷயத்தைத் தெரிவித்து வந்தார்.

கோபால ராவ் வருகையை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்தோம். சிறிது நேரத்திற்குப் பின் இவர் மெல்லப் படிகளில் இறங்கி வந்தார். பரிசுத்தமான உடையும், விசாலமான பார்வையும், நெற்றியிலுள்ள திலகமும் அவருடைய கம்பீரமான தோற்றத்துக்கு அங்கங்களாக இருந்தன. தூய்மையே அவர் வடிவம் என்னும்படி இருந்தது அக்காட்சி. அவரைக் கண்டவுடன் அஞ்சலி செய்துவிட்டுச் செட்டியார், “நான் முன்னமே இவ்விடத்தில் விஞ்ஞாபனம் செய்து கொண்டபடி என் ஸ்தானத்திற்குக் குறிப்பிட்டவரை அழைத்து வந்திருக்கிறேன். இங்கே அவரைப் பரீக்ஷித்துப் பார்க்கவேண்டும்” என்றார். அப்போது அவர், “நீங்கள் சொல்வதே போதும்; நான் பரீக்ஷை செய்யவேண்டியது அவசியமில்லை. உங்கள் வாக்கே எனக்குப் பிரமாணம்” என்றார். அப்போது நான் பண்டார சந்நிதிகள் கொடுத்திருந்த கடிதத்தைக் கொடுத்தேன். அதை அவர் படித்துப் பார்த்தார். அப்பால் சேஷையர் ஆங்கிலத்தில் அவரோடு பேசத் தொடங்கினார். மடத்தின் பெருமையையும்,