பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவலையற்ற வாம்க்கை

521

கும்பகோணத்தில் சில தெருக்களைப் பார்த்து விட்டுப் பக்தபுரி அக்கிரகாரத்துக்குள் செல்லும்போது, “மங்களாம்பா இருக்கிறாள்; பயமில்லை” என்று யாரோ இருவர் பேசிக் கொண்டிருந்தது அவர் காதில் பட்டது. கும்பகோணம் கும்பேசுவரராலயத்தில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையின் திருநாமம் அது. அந்த வார்த்தைகள் நல்ல சகுனமாகத் தோன்றவே அவர் அந்தத் தெருவின் மத்தியில் கீழ் சிறகில் ஒரு வீட்டைப் பார்த்துத் திட்டம் செய்தார். மாதம் மூன்றரை ரூபாய் வாடகை பேசினார். பதினைந்தடி அகலமும் நாற்பதடி நீளமும் உள்ளது அது. வீட்டிற்குப் பின் நீண்ட தோட்டமும் இருந்தது.

வீடு எல்லோரும் இருப்பதற்குப் போதுமானதாக இராவிட்டாலும் சகுனத்தின் விசேஷத்தால் என் தந்தையாருக்கு அதுவே பெரிய மாளிகையாகத் தோற்றியது. வாழ்க்கையில் பல வகையான துன்பங்களையும், வறுமையின் சங்கடங்களையும் அனுபவித்துத் தேர்ந்த அவருக்குப் பணம் கிடைத்தால் எவ்வளவு செட்டாக வாழமுடியுமோ அவ்வளவு செட்டாக வாழ வேண்டுமென்ற சங்கற்பம் இருந்தது. அதனால் அவருடைய நோக்கத்துக்கு அந்த வீடு ஏற்றதாகவே அமைந்தது.

வீட்டைப் பார்த்துத் திட்டம் செய்துவிட்டு நடந்தே திருவாவடுதுறை வந்து சேர்ந்தார். “காவிரிக்கும் காலேஜு க்கும் பக்கமாக இருக்கிறது; இரண்டாம் வேளை ஆகாரத்துக்கு வீட்டுக்கு வந்து போகலாம். நல்ல சகுனமாயிற்று” என்று சொல்லி எங்களுக்குச் சந்தோஷத்தை உண்டாக்கினார்.

விடுமுறை முடிந்தது. என் தகப்பனாருக்குத் திருவாவடுதுறையை விட்டுப்பிரிய மனம் வரவில்லை. ஆனாலும் ஒரு வகையாகச் சமாதானம் செய்து கொண்டார். யாவரும் சுப்பிரமணிய தேசிகரிடத்திலும் மற்ற அன்பர்களிடத்திலும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டுக் கும்பகோணம் வந்து புது வீட்டில் புகுந்தோம். அதுவரையில் திருவாவடுதுறை வாசியாக இருந்த நான் அன்று முதல் கும்பகோண நகர வாசியாக என் வாழ்க்கையைத் தொடங்கினேன்.

அத்தியாயம்—87

கவலையற்ற வாழ்க்கை

நான் வேலையை ஒப்புக்கொண்டபோது கும்பகோணம் காலேஜில் ஹைஸ்கூல் வகுப்புக்களும் இருந்தன. அவ் வகுப்புக்-