பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடையே வந்த கலக்கம்

571

ஆராய்ச்சிக்கு உதவியாக, யாழ்ப்பாணத்து நல்லூர் சிற். கைலாச பிள்ளை என்ற ஒருவர் இருந்தார். அவர் நல்ல அறிவாளியாகத் தோற்றினார்; என்பால் மிக்க அன்புடன் அவர் பழகினார்.

ஒரு நாள் சம்பாஷயையில் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் கம்பராமாயணத்தில் மிக்க விருப்பமுடையவர்களென்றும் அவர்களிடமிருந்து பல திருத்தமான பாடங்கள் தெரியவந்தனவென்றும் தாமோதரம் பிள்ளையிடம் சொன்னேன். அன்றியும் மடத்திலுள்ள பிரதிகளை வைத்துக்கொண்டு இராமாயணம் முழுவதும் சோதித்து நல்ல பாடங்களைக் கைப் பிரதியில் குறித்துக்கொண்டே செய்தியையும் தெரிவித்தேன். பின்பு அவர் என்னிடமுள்ள கம்பராமாயணப் பிரதியை ஒவ்வொரு காண்டமாக வாங்கி நான் செய்திருந்த திருத்தங்களையெல்லாம் தம் பிரதியில் செய்துகொண்டு என் பிரதியை என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்.

ஒரு பிற்பகலில்

ஒரு நாள் பிற்பகலில் தாமோரம் பிள்ளை என் வீட்டுக்கு வந்தார். நெடுநேரம் பேசிக் கொண்டிருந்த பின்பு, “தங்களிடம் சிந்தாமணி விசேஷ உரையுள்ள பிரதியொன்று இருக்கிறதென்றும், அதனை ஆராய்ந்து வைத்திருக்கிறீர்களென்றும், அது நல்ல பிரதியென்றும் சென்னையில் நாவலர் பதிப்பு நூல்களை மீட்டும் பதிப்பித்து வந்த சதாசிவ பிள்ளை சொன்னார். சிந்தாமணியைப் பதிப்பிக்கலாமென்று நான் எண்ணியிருக்கிறேன். கொழும்பிலிருக்கும் பெரிய பிரபுவாகிய கனம் ராமநாதனவர்கள் அதன் பதிப்புக்கு வேண்டிய செலவு முழுவதையும் தாம் கொடுப்பதாக எனக்கு வாக்களித்திருக்கிறார். தங்கள் பிரதியைக் கொடுத்தால் என்னிடமுள்ள பிரதியோடு ஒப்பிட்டுக்கொண்டு பதிப்பிப்பேன்” என்றார்.

“மிகவும் சிரமப்பட்டுப் பல வருஷங்களாகச் சோதித்து வைத்திருக்கிறேன். நானே அதனை அச்சிட எண்ணியிருக்கிறேன். ஆதலால் கொடுக்க மனம் வரவில்லை” என்று சொல்லி நான் மறுத்தேன்.

தாமோ:— இந்த விஷயத்தில் நான் மிக்க அனுபவமுள்ளவன். சீவகசிந்தாமணியைப் பதிப்பிக்க முதலில் அதிகப் பணம் வேண்டும். சென்னபட்டணத்தில் அச்சிடவேண்டும். நீங்கள் இங்கே இருந்து கொண்டு சென்னையில் அச்சிடுவதென்றால் எளிதில் முடியாது. நான் தொடங்கினேனானால் இன்னும் மூன்று நான்கு மாதங்களுள் புத்தகத்தை நிறைவேற்றி விடுவேன். உங்கள் கையில் பொங்கலுக்குள் முந்நூறு பிரதிகள் தருவேன்.