பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அத்தியாயம்—95

சிந்தாமணிப் பதிப்பு ஆரம்பம்

சீவகசிந்தாமணியை விரைவில் அச்சிட ஆரம்பிக்க வேண்டுமென்ற வேகம் எனக்கு உண்டாயிற்று. நன்றாக ஆராய்ந்து அதனை வெளியிட வேண்டுமானால் பல வருஷங்கள் செல்லும். ஆனால் ஒவ்வொரு விஷயத்தையும் சந்தேகமறத் தெளிந்து திருப்தியான பிறகு தான் வெளியிடுவது என்பது எளிதன்று. என்னுடைய நண்பர்களிற் சிலர், “இப்படி ஆராய்ந்து கொண்டே இருந்தால் வாழ்வாள் முழுவதும் இதிலேயே செலவாகிவிடும். நீங்கள் நிதானித்துப் பதிப்பிப்பதற்குள் வேறு யாராவது வெளியிட்டு விடுவார்கள். இதுவரையில் தெரிந்த விஷயங்களை ஒருவாறு அமைத்துக்கொண்டு ஆரம்பித்துவிடுங்கள். அடுத்த பதிப்பில் வேண்டிய திருத்தங்களைச் செய்துகொள்ளலாம். பதிப்புக்கள் வர வர விஷயமும் திருந்தும்” என்று தைரியம் சொன்னார்கள். அப்போது பதிப்பிக்கலாமென்று நிச்சயம் செய்து கொண்டேன்.

கையொப்பம் வாங்கியது

’பதிப்பிக்கப் பணம் வேண்டுமே; அதற்கு என்ன செய்வது!’ என்ற கவலை உண்டாயிற்று; சில நண்பர்கள் அதற்கு உபாயம் சொன்னார்கள். “தமிழன்புடைய தக்க கனவான்களிடத்தில் சென்று சிந்தாமணியைப் பதிப்பிக்கும் செய்தியைக் கூறிக் கையொப்பம் பெற்று முன்பணம் வாங்கிக்கொண்டு பதிப்பிக்கத் தொடங்கலாம்” என்றார்கள். அது நல்ல உபாயமென்றே தோற்றியது. அதன் பொருட்டு ஒரு விளம்பரம் அச்சிட்டு அன்பர்களுக்கு அனுப்பினேன்.

திருவாவடுதுறைக்குச் சென்று பண்டார ஸந்நிதிகளிடம் என் கருத்தைத் தெரிவித்தபோது அவர் மிக்க மகிழ்ச்சியுடன் முதற் கையொப்பத்தைத் தாமே இடுவதாகச் சொல்லிச் சில பிரதிகளுக்குக் கையெழுத்திட்டுப் பணமும் அளித்தார். கும்கோணத்தில் சற்றேறக்குறைய எழுபது அன்பர்களிடம் கையொப்பம் வாங்கினேன். தஞ்சைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் சென்று அன்பர்கள் பலருடைய உதவியைப் பெற்றேன். திருச்சிராப்பள்ளியில் தியாகராச செட்டியாருடைய சகாயத்தால் இருபது இருபத்தைந்து பேர்கள் கையொப்பம் செய்தார்கள்.

இராசசுவாமி முதலியார் வார்த்தை

திருச்சிராப்பள்ளியில் இருக்கும்பொழுது உடையார்பாளையம் வழக்கு ஒன்றுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு சேலம்

என்.—37