பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

582

என் சரித்திரம்

”நீங்கள் சிந்தாமணிப் பிரதிகள் கொண்டு வந்திருக்கிறீர்களென்று கேள்வியுற்றேன். அந்தப் புஸ்தகங்களையும் உங்களையும் பார்க்கத்தான் இப்போது வந்தேன்” என்றார் அவர்.

உடனே பெட்டியைத் திறந்து பிரதிகளை எடுத்துக்காட்டினேன். “நீங்கள் வெகு சிரமப்பட்டு இவற்றைச் சேகரித்து ஆராய்ந்து வைத்திருக்கிறீர்களென்று தெரிகிறது” என்று அவர் அவற்றைப் பார்த்துவிட்டுச் சொன்னார்.

“இந்தப் பிரதிகளையெல்லாம் வைத்துக்கொண்டு ஒப்பிட்டீர்களா?” பாட பேதங்களைக் குறித்திருக்கிறீர்களா?” என்று அவர் கேட்டார்.

“எல்லாம் ஒருவாறு, செய்திருக்கிறேன். சில பிரதிகள் முற்றும் ஒப்பு நோக்கப்பட்டன. சிலவற்றை, சந்தேகமுள்ள இடங்களில் மட்டும் பார்த்துத் திருத்தங்களைத் தெரிந்து கொண்டேன்.அப்படிச் செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. ஏதோ நான் சிரமப்பட்டு உழைத்துத் தொகுத்து வந்திருக்கிறேன். அதை நல்ல முறையில் அச்சிட்டு அழகு படுத்தித்தருவது உங்கள் கடமை” என்று பணிவாகச் சொன்னேன். பிறகு எந்த எந்த வகையில் பதிப்பு அமைய வேண்டுமென்பதைப்பற்றி யோசனை செய்யலானோம்.

“பாட்டு, பொழிப்புரை, விசேடவுரை எல்லாம் ஒன்றாக இருக்கின்றனவே! நான் என்ன செய்கிறது?” என்று கேட்டேன். அப்படி மூன்றும் கலந்திருப்பதைத் தெளிவாக வேறு பிரித்து அறிவதும், அறியும்படி செய்வதும் மிகவும் கடினமான செயல்களென்று அக்காலத்தில் நான் எண்ணியிருந்தேன். அப்பொழுது அவர் சொன்ன பதில் எனக்கு மிக்க ஆச்சரியத்தை விளைவித்தது.

“அவற்றை மிகவும் சுலபமாகத் தனித்தனியே அமைத்து விடலாம். மூலத்தைப் பெரிய எழுத்திலும் உரைகளைச் சிறிய எழுத்திலும் அச்சிடவேண்டும். மொழிப்புரையையும் விசேட உரையையும் தனித்தனியே பாரா பாராவாக அமைத்துவிட்டால் அவை வேறு வேறு என்று தெரியவரும். ஏட்டுப் பிரதியிலுள்ள குழப்பங்களை யெல்லாம் அச்சில் மாற்றி விடலாம். அதைப்பற்றி நீங்கள் சிறிதும் கவலையடைய வேண்டாம்” என்று அவர் சொன்னார்.

‘இப்படி யார் சொல்லப்போகிறார்கள்! இதுவும் தெய்வத்தின் திருவருளே!’ என்று எண்ணி நான் பேருவகையுற்றேன்