பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகிழ்ச்சியும் வருத்தமும்

605

முன்பு உண்டான மகிழ்ச்சி இருந்த இடம் தெரியாமற் போய் விட்டது.

என் வாட்டத்தை அறிந்த அரங்கநாத முதலியார், “இதைப் போன்ற விஷயங்களை நீங்கள் காதிலேயே வாங்கிக் கொள்ளக் கூடாது. எடுத்த காரியத்தைப் பின் வாங்காமல் நிறைவேற்றி விடவேண்டும். உங்கள் திறமை எனக்குத் தெரியாதா? தைரியமாக இருந்து வேலையைக் கவனியுங்கள். நீங்கள் கொடுத்த கையொப்பப் புஸ்தகத்தில் என் நண்பர்கள் சிலர் கையெழுத்திட்டிருக்கிறார்கள். சவலை ராமசுவாமி முதலியார், பம்மல் விஜயரங்க முதலியார் முதலியவர்கள் மிக்க விருப்பத்தோடு கையொப்பம் செய்தார்கள்” என்று சொல்லி எனக்கு மிக்க உத்ஸாகத்தை உண்டாக்கினார்.

இராசகோபால பிள்ளை

மற்றொரு சமயம் கோமளீசுவரன் பேட்டை இராச கோபால பிள்ளையைப் பார்த்தேன். அவர் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தவர். நான் அவரைப் பார்க்கப் போனபோது அவருடன் காஞ்சீபுரம் இராமசாமி நாயுடு என்னும் வித்துவானும் இருந்தார். பல நூல்களுக்கு உரை எழுதியவரும் பிற்காலத்தில் இராமானந்த யோகியென வழங்கப் பெற்றவரும் அந்த நாயுடுவே.

பாகவதம் முழுவதையும் இராசகோபால பிள்ளை அச்சிட்டிருந்தார். அதிற் சில பகுதிகள் ஒரு வருஷம் பி. ஏ. பரீட்சைக்குப் பாடமாக இருந்தன. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் நான் படிக்க வருவதற்கு முன்பிருந்தே பாகவதத்தில் எனக்குப் பழக்கம் இருந்தது. பாகவத ஏட்டுச் சுவடிகள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். இராசகோபால பிள்ளையின் பதிப்பில் நூலாசிரியரின் பெயர் “ஆரியப்பப் புலவர்” என்று இருந்தது. “சிந்தகத்துக் கீழமர்ந்த” என்ற சடகோபர் வணக்கச் செய்யுளொன்றும் இருந்தது. இவ்விரண்டையும் ஏட்டுப் பிரதிகளில் நான் கண்டதில்லை. அதனால், இராச கோபால பிள்ளையிடம், “நான் பார்த்த பிரதிகளிளெல்லாம் ஆசிரியர் பெயரே காணப்படவில்லை. இந்தச் செய்யுளும் இல்லையே இவற்றை நீங்கள் எங்கே கண்டு பிடித்தீர்கள்?” என்று கேட்டேன். அவர், “அந்த நூலை நான் பதிப்பிக்கவில்லை. சில பாகம் மாத்திரம் பார்த்த துண்டு. என் பெயரைப் போட்டு யாரோ அச்சிட்டு விட்டார்கள். ஆதலால் இந்த விஷயத்துக்கு நான் பொறுப்பாளியல்ல” என்று சொல்லவே நான் வியந்தேன். பிற்காலத்தில் பாகவதத்தின் ஆசிரியர் வேம்பத்தூர்ப்