பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

624

என் சரித்திரம்

மனம் அப்போது உணர்ந்து வருந்தியது. “நான் செய்தது தவறு தான்” என்று ஒப்புக் கொண்டேன்.

கம்பர் தம் வீட்டில் நிகழ்ந்த விசேஷத்திற்கு வந்த சடையப்ப வள்ளலை, இடமில்லாமையால் எங்கே ஒரு மூலையில் அமரச் செய்தாராம். இதைக் கண்ட ஓர் அன்பர், “என்ன! இவர்களை இந்த இடத்தில் இருக்கச் செய்தீர்களே?” என்று கம்பரைக் கேட்டாராம். உடனே அப்புலவர் பெருமான், “இவர்களை வைக்குமிடத்தில் வைப்பேன்” என்று சொல்லித் தாம் பாடிய இராமாயணத்தில் பத்து இடத்தில் அவ்வள்ளலைப் பாராட்டி அவர் புகழை வைத்தாராம். இந்தக் கதை அப்போது எனக்கு ஞாபகம் வந்தது. ‘தவறியதற்குத் தக்க ஈடு செய்து விட வேண்டும்’ என்று சங்கற்பம் செய்து கொண்டேன். அந்தச் சங்கற்பத்தை நான் பிற்காலத்தில் மூன்று வகையில் நிறைவேற்றினேன். ஐங்குறு நூற்றுப்பதிப்பைச் செட்டியாருக்கு உரிமையாக்கினேன். “கும்பகோணம் காலேஜில் பி. ஏ. வகுப்பில் தமிழெடுத்துக் கொண்டு படிக்கும் ஒரு சைவ மாணவனுக்கு வருஷந்தோறும் செட்டியார் பெயரால் நாற்பத்தெட்டு ரூபாய் வீதம் பல வருஷங்களாகக் கொடுத்து வருகிறேன். சென்னைக்கு வந்தபிறகு எப்போதும் அவர் ஞாபகம் எனக்கிருப்பதற்காக என் வீட்டிற்கு, “தியாக ராஜ விலாஸம்” என்ற பெயரை வைத்தேன். இவ்வளவும் அவர் உயிரோடிருந்த காலத்தில் செய்யும் பாக்கியம் எனக்கு இல்லை. என்னுடைய நிலையான துரதிருஷ்டங்களில் இந்தக் குறையும் ஒன்று என்று இன்றும் கருதி வருந்துகிறேன்.

செட்டியாரிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு அன்று இரவே புறப்பட்டுக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன். சேலம் இராமசுவாமி முதலியார் சென்னையிலுள்ள கையொப்பக்காரர்களிடமிருந்து பணம் தொகுத்துத் திருவல்லிக்கேணி விசுவநாத சாஸ்திரியாரிடம் நான் வாங்கியிருந்த கடனைத் தீர்த்து விட்டார். அவருக்குப் பணம் கொடுத்துவிட்ட விஷயத்தை முதலியார் எனக்கு எழுதியபோது என் தலையிற் சுமந்திருந்த பெரும் பாரம் நீங்கியது போன்ற ஆறுதலை அடைந்தேன்.

சின்னசாமி பிள்ளையின் பாடல்

சிந்தாமணிப் பிரதிகளைப் பெற்ற அன்பர்கள் அதைப் பாராட்டி எனக்குக் கடிதம் எழுதினார்கள். கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் சின்னசாமிபிள்ளை பின்வரும் செய்யுளை 1887-ம் ௵ நவம்பர் ௴ 17-ம்தேதி எழுதியனுப்பினார்.