பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடுத்த நூல்

625

பனிமதிச் சடிலத் திறைகழல் மறவாப்
    பான்மையோய் பாருளா ரேத்தும்
நனிபெரும் புலவர் குலமணி சாமி
    நாதவேந் தாலெனைப் பொருளாத்
தனியுளங் கொடுதொல் காப்பிய நன்னூல்
    தந்தகத் தியமிது நோக்கென்
றினிதளித் தளைநிற் கியற்றுமா றுளதோ
    எண்ணிலென் வந்தன மல்லால்.”

இந்தப் பாடலில் ‘தொல்காப்பியம் நன்னூல் தந்து அகத்தியம் இது நோக்கென்றினி தளித்தனை’ என்பதற்கு, “பழைய காப்பியமாகிய நல்ல நூலைத் தந்து அவசியம் இதைப் பார் என்று கொடுத்தாய்” என்பது பொருள். இப்பகுதியில் தொல்காப்பியம், நன்னூல், அகத்தியம் என்னும் மூன்று இலக்கணநூற் பெயர்கள் தொனிக்கும்படி பாடியிருப்பது ஒரு நயம். நான் செய்யுளைப் பார்த்து மகிழ்ந்து உடனே வேறொரு செய்யுளால் விடையளித்தேன்.

“வன்புள பிரதி யுதவி நீ புரிந்தும்
     மாறுள தோவென்ற தென்னே”

என்பது அதன் இறுதி அடி: முழுச்செய்யுள் இப்போது ஞாபக மில்லை.

குமாரசாமி முதலியார் கடிதம்

ராமலிங்க தேசிகர் சொன்னபடி நான் அனுப்பிய சிந்தாமணிப் பிரதிகளைப் பெற்ற பொ. குமாரசாமி முதலியார் 21-12-1887 ஆம் தேதி பிரதிகளின் கிரயத்தையும் ஒரு கடிதத்தையும் அனுப்பினார். ‘தங்கள் கீர்த்திகளைக் குறித்து ஸ்ரீமத் ராமலிங்க தேசிகரவர்கள் இங்கே பலமுறை என்னோடு கலந்து பேசியபொழுது மகிழ்ச்சியும், அப்படிப்பட்ட வித்வ சிரோமணிகள் இங்கே இருந்தால் கலந்து சம்பாஷித்துக்கொள்ளலாம்; அவ்வாறு கிடைக்கப் பெறவில்லையே என்பதனால் துக்கமுமடைந்தேன். தாங்கள் என்பேரில் வைத்த அன்பினாலனுப்பிய சீவக சிந்தாமணிப் புத்தகத்துக்காகத் துதி கூறுகின்றேன். மேற்படி புத்தகத்தைப் பார்த்தவளவில் என் மனத்தில் எழுந்த மகிழ்ச்சி இவ்வளவென்று சொல்லத் தக்கதன்று. இப்படிப்பட்ட அரிய நூலினது அருமை அறியத் தக்கவர்க்கு, ஏட்டுப் பிரதிகளிலிருந்தமையால், அறிதற்கரிதாயிருந்த குறையை நீக்கிய பரோபகார சிந்தைக்காகவும் முயற்சிக்காகவும் நாமெல்லாம் மிகக் கடமை பூண்டிருக்கின்றோம். இன்னும் இப்படிப்பட்ட அரிய பெரிய நூல்களைத் திருத்தி அச்சிட்டு வெளிப்படுத்திவரக் கடவுள் துணை செய்வாராக....’ என்று அவர் அக்கடிதத்தில் எழுதியிருந்தார்.

என்-40