பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப் பாட்டின் நல்ல பிரதிகள்

643

புலவர் பெருமான் திருநெல்வேலியில் வசித்தவராதலால், அவர் வீட்டில் ஏடுகள் இருந்தால் கவனிக்க வேண்டுமென்று எனக்கு ஆசை உண்டாயிற்று.

“மயிலேறும் பெருமாள் பிள்ளையின் சந்ததியார் யாரேனும் இங்கே இருக்கிறார்களோ?” என்று நெல்லையப்பக் கவிராயரைக் கேட்டேன்.

“அவர் பரம்பரையில் மயிலேறும் பெருமாள் பிள்ளையென்றே ஒருவர் இருக்கிறார் அவர் பெரிய லௌகிகர். தமிழ் சம்பந்தமான முயற்சியில் அவர் ஈடுபடவில்லை. ஆனாலும் உங்களுக்குக் காட்டுகிறேன்” என்று கூறி, உடனே அவருக்குச் சொல்லியனுப்பினார்.

அவர் வந்தார். நெல்லையப்பக் கவிராயர் அவருக்கு என்னைப் பழக்கம் செய்வித்தது “இவர்கள் ஏடு பார்க்க வந்திருக்கிறார்கள். நீங்கள் பெரிய வித்துவான்கள் பரம்பரையானமையால் உங்கள் வீட்டிலும் பார்க்க விரும்புகிறார்கள்” என்றார். அவர் “நான் பெரிய வித்துவான் பரம்பரையைச் சேர்ந்தவன் என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். என் தகப்பனார் வரையில் அந்தப் படிப்பு இருந்து வந்தது. எனக்கு இலக்கண இலக்கியப் பயிற்சியை அவர் செய்விக்காமையால் இங்கிலீஷ் படித்தேன். இப்போது நான் நல்ல வக்கீல் குமாஸ்தாவாக இருக்கிறேன். சட்டத்தில் பழக்கம் உண்டு. என் வீட்டில் சட்ட புஸ்தகங்கள் நிறைய இருக்கின்றன. பழைய ஏடுகள் எங்கள் வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டு இருப்பதேன் என்றெண்ணிக் கேட்டவர்களுக்கெல்லாம் கொடுத்து விட்டேன். இப்போது ஒன்றுகூட இல்லை. இதோ கையிலிருக்கிற கட்டு நம்பர்க் கட்டு” என்று சொன்னார்.

“அப்படிச் சொல்ல வேண்டாம்; ஒன்று இரண்டாவது இருக்கலாம். தேடிப் பாருங்கள்” என்று நான் சொன்னேன்.

“நான் தான் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறேனே. எனக்குத் தெரியாமல் எங்கே ஒளிந்து கொண்டிருக்கும், எங்கள் வீட்டிற்கு வர வேண்டாமென்று சொல்லவில்லை. வாருங்கள்; இருங்கள். தாம்பூலம் தருகிறேன். ஆனால் ஏடு என்ற பேச்சு மாத்திரம் எடுக்காதீர்கள். என்னிடம் இருந்தால் அல்லவா உங்களுக்குக் கொடுப்பேன்” என்று சொல்லி விட்டார். நான் மறுபடியும் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, “எனக்கு வேலையிருக்கிறது; விடை கொடுங்கள், போய் வருகிறேன்” என்று சொல்லிச் சென்று விட்டார்.

“கல்லாடத்துக்கு உரை எழுதிய மயிலேறும் பெருமாள் பிள்ளை எங்கே? அவர் பரம்பரையினராகிய இந்த மயிலேறும் பெருமாள்